சிறைபடுத்தப்பட்டோருக்கான பணியில் ஆறு ஆண்டுகளாக உழைக்கும் அருட் சகோதரிகள்
ஜூன்24,2010 சிறைகளில் துன்புறுவோரின் உடல், மன, ஆன்மீகத் தேவைகளுக்காகவும், அவர்களுக்குச்
சட்ட ரீதியான உதவிகள் செய்வதற்காகவும் தாங்கள் உழைப்பதாகக் கூறுகின்றனர் பெங்களூருவில்
கைதிகள் மத்தியில் உழைக்கும் அருட் சகோதரிகள். புனிதர்களான கயத்தானோ, ஜெரோசாவின் பிறரன்பு
சேவைச் சபையைச் சார்ந்த மூன்று அருட்சகோதரிகள் இந்திய கத்தோலிக்க ஆயர் அவையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள
சிறைபடுத்தப்பட்டோருக்கான பணியில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளனர். இந்த கைதிகளின்
விடுதலை, மறு வாழ்வு இவைகளே தங்கள் பணியின் முக்கிய அம்சங்கள் என்று அருட்சகோதரிகள் கூறினர்.
செப வழிபாடுகள், ஞாயிறு திருப்பலி, மனதையும், உடலையும் ஒரு நிலைப் படுத்தும் யோகா பயிற்சிகள்
இவற்றை அளிப்பதால், இந்தக் கைதிகளின் உள்ளங்களில் அமைதியைக் கொணர முடிகிறதென அருட்சகோதரிகள்
கூறினர்.இவைகளன்றி, மெழுகுதிரிகள் செய்தல், வலைகள் பின்னுதல், ரொட்டி சுடுதல் போன்ற வாழ்வுக்குத்
தேவையான திறமைகளையும் வளர்க்க உதவுவதாக கைதிகள் மத்தியில் உழைக்கும் அருட்சகோதரி ஏடெல்
கூறினார்.