UNHCRன் 48வது செயற்குழு கூட்டத்தில் பேராயர் சில்வானோ தொமாசி உரையாற்றினார்
ஜூன்23,2010 நாடு விட்டு நாடு புலம் பெயர்ந்தோரைக் காக்கும் முயற்சிகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட
வேண்டும் என திருப்பீடம் அதிகம் வலியுறுத்தி வருவதாக பேராயர் சில்வானோ தொமாசி கூறினார். UNHCRன்
48வது செயற்குழு கூட்டத்தில் இச்செவ்வாயன்று உரையாற்றிய ஜெனீவாவின் ஐ.நா. நிறுவனங்களுக்கான
திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதி பேராயர் தொமாசி இவ்வாறு கூறினார். உலகில் வெளியாகி
வரும் புள்ளி விவரங்களின்படி, தாங்களாகவே முன்வந்து நாடு விட்டு நாடு செல்லும் மக்களின்
எண்ணிக்கையும், உள் நாட்டிலேயே பல்வேறு சூழ்நிலைகளால் வீடுகளையும், நிலங்களையும் இழந்து
இடம் பெயரும் மக்களின் எண்ணிக்கையும் அண்மையில் அதிகரித்து வருவது கவனிக்க வேண்டிய ஒரு
போக்கு என்று பேராயர் தெரிவித்தார்.இவ்வாறு புலம் பெயர்வோரின் அடிப்படைக் காரணங்களைக்
கண்டு, அவற்றைக் களைய அரசுகள் முயல வேண்டும் என்றும், இப்படிப் புலம் பெயர்வோரைக் குறித்த
விவரங்களும், செய்திகளும் பொறுப்புள்ள வகையில் தொடர்பு சாதனங்களில் வெளியாக வேண்டும்
என்றும் பேராயர் தொமாசி ஐ.நா. அவையில் வேண்டுகோள் விடுத்தார்.