"நான் யார்?" “Who
am I?” என்பது ஒரு தத்துவக் கேள்விபோலத் தேரிந்தாலும், உலகில் இந்தக் கேள்வியைச் சந்திக்காதவர்கள்,
சிந்திக்காதவர்கள் கிடையாது. நம்மில் பலருக்கு இது அவ்வப்போது எழும் ஒரு கேள்வியாக
இருக்கலாம். ஆனால், எத்தனையோ அறிஞர்களும், ஞானிகளும் "நான் யார்?" என்றத் தேடலில் வாழ்க்கை
முழுவதும் ஈடுபட்டுள்ளனர். நான் யார் என்ற இந்தக் கேள்விக்குள் பல கேள்விகள்... என்
குடும்பத்தினருக்கு நான் யார்? என் நண்பருக்கு நான் யார்? என் பணியிடத்தில், நான் வாழும்
சமுதாயத்தில் நான் யார்? இவர்களுக்கெல்லாம் நான் என்னவாகத் தெரிகிறேன்? அடிப்படையில்,
மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? என்பது நம் வாழ்வின் ஒரு முக்கிய கேள்வியாக
இருந்து வருகிறது.
இயேசுவுக்கும் இந்தக் கேள்வி எழுந்தது. இயேசுவின் இந்தத்
தேடலை இன்றைய நற்செய்தி நமக்குக் கூறுகிறது. லூக்கா 9: 18-24 இந்த
நற்செய்தியின் இரு வாக்கியங்கள், இயேசுவின் அந்த இரு கேள்விகள் நம் சிந்தனைகளை இன்று
நிறைக்கட்டும். "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" "நான் யார் என்று நீங்கள்
சொல்கிறீர்கள்?"
நான் கல்லூரியில் பணி புரிந்த போது, அரசு அதிகாரிகள் சிலருடன்
பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் அவ்வப்போது சொன்ன ஒரு சில தகவல்கள் இப்போது என் நினைவுக்கு
வருகின்றன. ஒவ்வொரு நாள் காலையிலும், அன்று காலை செய்தித் தாள்களில் வந்த தகவல்களையும்,
முந்திய நாள் இரவு தொலைக்காட்சி வழியே வந்த தகவல்களையும், சேகரித்து, வகைப் படுத்தி,
பட்டியலிட்டு, பிரதம மந்திரி அல்லது முதல் அமைச்சர் இவர்களிடம் கொடுப்பதற்கென ஒரு அரசு
அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தகவல்களைப் பட்டியலிடுவதன் முக்கிய நோக்கம்...
நாட்டு நடப்பு பற்றி தெரிந்து கொள்வது ஒரு புறமிருக்க, நாட்டில் தங்களைப் பற்றிய, தங்கள்
ஆட்சி பற்றிய எண்ணங்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம். ஒவ்வொரு
நாள் காலையிலும் இத்தலைவர்களின் நினைவை, மனதை ஆக்ரமிக்கும் அந்த கேள்வி: "நான் யார் என்று
மக்கள் சொல்கிறார்கள்?" இவர்கள் மனதை இந்தக் கேள்வி ஆக்கிரமிக்கின்றது, உறுத்துகின்றது
என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், இந்தக் கேள்வியின் பின்னணியில் பயம், சந்தேகம் இவைகள்
தாம் இந்தக் கேள்வியை இவர்களிடம் எழுப்புகின்றன. மக்களை முன் நிறுத்தி, மக்களை மையப்படுத்தி,
அவர்கள் நலனையே நாள் முழுவதும், சிந்திக்கும், அதன்படி செயல்படும் தலைவனுக்கோ, தலைவிக்கோ
இந்தக் கேள்வி பயத்தை உண்டாக்கத் தேவையில்லை...
இயேசு இந்தக் கேள்வியைக் கேட்டதற்கு
இந்த பயம், சந்தேகம் காரணம் இல்லை. அவர் இந்தக் கேள்வியைத் தன் சீடர்களிடம் ஏன் கேட்டார்
என்ற காரணத்தை நான் இப்படி நினைத்துப் பார்க்கிறேன். தன்னை இன்னும் சரிவர புரிந்து
கொள்ளாத சீடர்கள், தன்னைப் பற்றி மக்கள் சொல்வதைக் கேட்டாகிலும் இன்னும் கொஞ்சம் ஆழமாகத்
தன்னைப் புரிந்து கொள்ள மாட்டார்களா என்ற ஏக்கம் இயேசுக்கு இருந்திருக்கலாம். அல்லது,
இந்த கேள்வி பதில் பரிமாற்றத்திற்குப் பின், நாம் இன்றைய நற்செய்தியில் வாசித்தது போல்,
தன் பாடுகளைப் பற்றி சீடர்களுக்குச் சொல்லப் போவதற்கு ஒரு முன்னேற்பாடாக மக்கள் தன்னைப்
பற்றிக் கூறும் ஒரு சில விசுவாச அறிக்கைகள் அவர்களுக்கு உதவாதா என்ற ஏக்கமாக இருக்கலாம்.
"நான்
யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" இயேசு இந்தக் கேள்வியை அவர் காலத்து மக்களுக்கு மட்டுமல்ல.
இன்றும் கேட்கிறார். மக்கள் இயேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? இருபது நூற்றாண்டுகளாய்
மனித வரலாற்றில் அதிகமான, ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியவர்களைக் குறித்து கருத்துக் கணிப்புகள்
பல நடந்துள்ளன. ஏறக்குறைய எல்லாக் கருத்துக் கணிப்புகளிலும் இயேசுவின் பெயர் முதலிடம்,
அல்லது, முதல் மூன்று இடங்களில் ஒன்றாக இருந்துள்ளது. மனித வரலாற்றை இத்தனை நீண்ட காலம்...
ஈராயிரம் ஆண்டுகள்..., இத்தனை ஆழமாகப் பாதித்துள்ளவர்கள் ஒரு சிலரே...
மக்கள்
இயேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? என்னென்னவோ சொல்லி விட்டார்கள். இன்னும் சொல்லி
வருகிறார்கள்... நல்லதும், பொல்லாததும்... உண்மையும், பொய்யும்... விசுவாசச் சத்தியங்களும்,
கற்பனைக் கதைகளும்... அளவுக்கதிகமாகவே சொல்லி விட்டார்கள். ஆனால், இவ்வளவு சொல்லியும்
இயேசுவைப் பற்றி முழுமையாக நம் மனித குலம் சொல்லிவிட்டதா என்று கேட்டால், இல்லை என்று
தான் சொல்ல வேண்டும். இயேசு இவர்தான், இப்படித்தான் என்று சொல்வது மிகக் கடினம். இலக்கணங்களை,
வரையறைகளை, வேலிகளை உடைப்பது இயேசுவின் இலக்கணம். இயேசுவின் அழகு. யோவான் தன் நற்செய்தியின்
இறுதியில் எழுதியுள்ள வரிகள் என் நினைவுக்கு வருகின்றன: யோவான் 21: 25 இயேசு
செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும்
நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன். "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" ஹலோ,
உங்களைத் தான்... என்னையும் தான்... இந்தக் கேள்வி நமக்குத் தான்...
சிறு வயது
முதல் அம்மாவிடம், அப்பாவிடம், குருக்கள், அருட் சகோதரிகளிடம், ஆசிரியர்களிடம் நான் பயின்றவைகளை
எல்லாம், நான் மனப்பாடம் செய்தவைகளை எல்லாம் பட்டியலிட்டு இயேசு கேட்ட அந்த முதல் கேள்விக்குப்
பதில் ஒப்பித்து விடலாம்.
ஆனால், இந்த இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில்
சொல்லிவிட முடியாது. நான் படித்தவைகளை விட, பட்டுணர்ந்தவைகளே இந்தக் கேள்விக்குப்
பதிலாக வேண்டும். நான் மனப்பாடம் செய்தவைகளை விட, மனதார நம்புகிறவைகளே இந்தக் கேள்விக்கான
பதிலைத் தர முடியும்.
இந்தக் கேள்வி நம்மில் பலருக்கு சங்கடங்களை உருவாக்கலாம்.
"என்ன இது... திடீர்னு இயேசு முகத்துல அறைஞ்சா மாதிரி இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுட்டார்...
எனக்கு அப்படியே, வெலவெலத்துப் போச்சு... என்ன சொல்றதுன்னே தெரியல..." இப்படி நீங்களும்
நானும் உணர்ந்தால், அது ஒரு நல்ல ஆரம்பம். இயேசுவின் இந்தக் கேள்வி வெறும் கேள்வி அல்ல.
ஓர் அழைப்பு. “என்னைப் பற்றிப் புரிந்து கொள்… என்னைப் பற்றிக் கொள்” என்று இயேசு விடுக்கும்
அழைப்பு.
எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. கயிற்றின் மேல் சாகசங்கள் செய்யும்
கழைக்கூத்துக் கலைஞர்களைப் பார்த்திருப்போம். இவர்களில் ஒரு சிலர் கயிற்றின் மேல் நடந்து
மட்டும் சாகசங்கள் செய்வதில்லை. கயிற்றின் மேல் படுத்தல், சாப்பிடுதல், இன்னும் சிலரை
ஏற்றிக் கொண்டு, சைக்கிள் சவாரி செய்தல்... இப்படி அவர்களது சாகசங்கள் பல விதம்... உலகப்
புகழ் பெற்ற ஒரு கழைக்கூத்துக் கலைஞர் இரு அடுக்கு மாடிகளுக்கிடையே கயிறு கட்டி சாகசங்கள்
செய்து கொண்டிருந்தார். அவரது சாகசங்களில் ஒன்று... மணல் மூட்டை வைக்கப்பட்ட ஒரு கை வண்டியைத்
தள்ளிக் கொண்டு அந்தக் கயிற்றில் நடப்பது. அதையும் அற்புதமாக அவர் முடித்த போது,
ரசிகர் ஒருவர் ஓடி வந்து அவரது கைகளை இறுகப் பற்றிக் கொண்டு, "அற்புதம், அபாரம். நீங்கள்
உலகிலேயே மிகச் சிறந்த கலைஞர்." என்று அடுக்கிக் கொண்டே போனார். "என் திறமையில் அவ்வளவு
ஈடுபாடு, நம்பிக்கை உள்ளதா?" என்று அந்தக் கலைஞர் கேட்டார். "என்ன, அப்படி சொல்லிவிட்டீர்கள்...
உங்கள் சாகசங்களைப் பற்றி நான் கேள்வி பட்ட போது, நான் அவைகளை நம்பவில்லை. இப்போது நானே
நேரில் அவைகளைக் கண்டு விட்டேன். இனி உங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதுதான் என் முக்கிய
வேலை." என்று பரவசப்பட்டுச் சொன்னார். "மற்றவர்களிடம் என்னைப் பற்றிச் சொல்வது இருக்கட்டும்.
இப்போது ஓர் உதவி." என்று கேட்டார் அந்தக் கலைஞர். "உம்.. சொல்லுங்கள்." என்று அவர்
ஆர்வமாய், அதிசயமாய் சொன்னார். "நான் மீண்டும் ஒரு முறை அந்தக் கயிற்றில் தள்ளு வண்டியோடு
நடக்கப் போகிறேன். இந்த முறை, அந்த மணல் மூட்டைக்குப் பதில், நீங்கள் அந்த வண்டியில்
அமர்ந்து கொள்ளுங்கள்... பத்திரமாக உங்களைக் கொண்டு செல்கிறேன். பார்க்கும் மக்கள் இதை
இன்னும் அதிகம் ரசிப்பார்கள். வாருங்கள்..." என்று அழைத்தார். அந்தக் கழைக்கூத்துக்
கலைஞரின் அருமை பெருமைகளை உலகறியச் செய்வதற்கு ஆர்வமாய் இருந்த அந்த ரசிகர், இருந்த இடம்
தெரியாமல் காற்றோடு கரைந்தார். அந்தக் கழைக்கூத்துக் கலைஞருக்கும் ரசிகருக்கும் இருந்த
உறவு கேள்வி ஞானத்தில் ஆரம்பித்து, நேரடியான பார்வையாளராக மாறியது வரை நன்றாகவே இருந்தது.
சாகசங்களைப் பார்த்து பரவசமடைந்த ரசிகர், அந்த சாகசங்களில் பங்கு பெற அழைக்கப்பட்டதும்,
காற்றோடு மறைந்து விட்டார்.
இயேசுவைப் பற்றி தெரிந்து கொள்ள, அவரைக் கண்டு பிரமித்துப்
போக, அவரை ரசிக்க கேள்வி அறிவு, புத்தக அறிவு போதும். அந்த பிரமிப்பில் நாம் இருக்கும்
போது, இயேசு நம்மிடம் "மக்கள் நான் யார் என்று சொல்கிறார்கள்?" என்று கேட்டால், நம் பதில்கள்
ஆர்வமாய் ஒலிக்கும். ஆனால், அந்த பிரமிப்பு, ரசிப்பு இவைகளோடு நாம் இயேசுவை உலகறிய பறைசாற்றக்
கிளம்பினால், புனித பவுல் சொல்வது போல், "ஒலிக்கும் வெண்கலமும், ஓசையிடும் தாளமும் போலாவோம்."
எனவே, இயேசு நம்மை அடுத்த நிலைக்கு வருவதற்கு கொடுக்கும் அழைப்பு தான் "நீங்கள் என்னை
யார் என்று சொல்கிறீர்கள்?" என்ற கேள்வியாக எழுகிறது. இது சாதாரண அழைப்பு அல்ல. அவரை
நம்பி அவரோடு நடக்க, அவரைப் போல் நடக்க, இரவானாலும், புயலானாலும் துணிந்து நடக்க அவர்
தரும் ஓர் அழைப்பு. வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த கொடுக்கப்படும் இந்த அழைப்பிற்கு,
மனதின் ஆழத்திலிருந்து வரட்டும் நம் பதில்கள்.