2010-06-18 15:00:34

கர்ப்பகால இறப்பைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வத்திக்கான் வலியுறுத்தல்


ஜூன்18,2010 உலகில் கர்ப்ப காலம் அல்லது குழந்தை பிறப்பின் போது ஒவ்வோர் ஆண்டும் இறக்கும் தாய்மாரின் எண்ணிக்கை அதிர்ச்சிதரும் வேளை, அதனைக் குறைப்பதற்குக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு சர்வதேச சமுதாயத்தை வலியுறுத்தியுள்ளது வத்திக்கான்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா.நிறுவனங்களுக்கான வத்திக்கான் பிரதிநிதியான பேராயர் சில்வானோ தொமாசி, ஐ.நா.மனித உரிமைகள் அவையில் உரையாற்றிய போது இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டுள்ள ஆப்ரிக்கத் தாய்மார்க்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்கு வழிசெய்வதும் இந்நடவடிக்கையில் சேர்க்கப்பட வேண்டுமென வலியுறுத்திய பேராயர் தொமாசி, திருமணத்திற்கானக் குறைந்த வயதை பதினெட்டாக்குவதும் பேறுகால இறப்பைக் குறைக்கும் என்றும் கூறினார்.

கர்ப்ப காலம் அல்லது குழந்தை பிறப்பின் போது ஒவ்வோர் ஆண்டும் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் முதல் ஐந்து இலட்சம் தாய்மார் இறக்கின்றனர்.

பெரும்பாலான இவ்விறப்புகள் வளரும் நாடுகளில் இடம் பெறுவதாகவும், ஆண்டுதோறும் முப்பது இலட்சம் குழந்தைகள் பிறந்த முதல் வாரத்திலும், மேலும் முப்பது இலட்சம் குழந்தைகள் பிறக்கும் முன்னரும், மேலும் 23 இலட்சம் குழந்தைகள், பிறந்த முதலாம் ஆண்டிலும் இறக்கின்றன எனவும் பேராயர் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.