2010-06-15 15:45:35

வரும் ஞாயிறை கொரிய ஐக்கியத்திற்கானச் செப நாளாக அறிவித்துள்ளது தலத்திருச்சபை.


ஜூன் 15, 2010. இரு கொரிய நாடுகளுக்கும் இடையேயான அண்மைப் பதட்ட நிலைகளைக் களையும் நோக்குடன் ஐக்கியம் மற்றும் ஒப்புரவிற்கான ஜெப நாள் வரும் ஞாயிறன்று சிறப்பிக்கப்படுவதாக அறிவித்துள்ளது கொரியத் தலத்திருச்சபை.
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளின் குழந்தைகள் எனப்படுவர் என்ற கருத்தை மையமாகக்கொண்டு இடம்பெறவுள்ள இத்தேசிய ஜெபநாளில் அனைத்து விசுவாசிகளும் கொரியர்களும் பங்கேற்குமாறு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
அமைதியைக் கட்டியெழுப்ப வேண்டியத்தேவைக் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்பவேண்டியது இன்றைய அத்தியாவசியத் தேவை என்ற கொரிய ஆயர் லூக்காஸ் கிம் ஊன் ஹொ, அமைதியில் ஒன்றிணைந்து வாழ்தல், ஒப்புரவு மற்றும் ஐக்கியம் என்பவை மீண்டும் அதிமுக்கியத்துவம் பெற்றவைகளாக மாறியுள்ளன என்றார்.
இம்மாதம் 20ந்தேதி தேசிய ஜெப நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்பதோடு, அமைதியைக் கட்டியெழுப்புபவர்களாகச் செயல்பட்டு, கொரியப் பிரிவினைகளால் துன்புறும் மக்களின் துயர் துடைத்து, வடபகுதி மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கி, வருங்காலம் குறித்த நம்பிக்கைகளை வளர்க்க வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளனர் கொரிய ஆயர்கள்.
பிரிவினைகளையும் போரையும் உருவாக்கும் தீமைகளை எதிர்த்துப் போரிடவும் பொதுநலனுக்காய் உழைப்பதற்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளனர் ஆயர்கள்.







All the contents on this site are copyrighted ©.