2010-06-12 15:00:16

மனித மாண்பையும் மனிதனின் நலத்தையும் மதிக்காதப் பொருளாதார வளர்ச்சியினால் பலன் என்ன? - திருத்தந்தை


ஜூன்12,2010 நீதி, சகோதரத்துவம் மற்றும் ஒருமைப்பாட்டின் அடிப்படையில் சமத்துவத்தை வளர்ப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள், இன்றைய மற்றும் வருங்கால ஐரோப்பாவுக்கு நன்மைபயக்கும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

ஐரோப்பிய அவையின் வளர்ச்சி வங்கியின் 160 உறுப்பினர்களை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, சமூகநலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படும் இந்த வங்கியின் நடவடிக்கைகளுக்குத் திருப்பீடம் ஆதரவு அளிக்கின்றது என்றுரைத்தார்.

மனித மாண்பையும் மனிதனின் நலத்தையும் மதிக்காதப் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்தும் சர்வாதிகாரக் கருத்துக் கோட்பாடுகளால் ஏற்படும் பலன் என்ன? என்ற கேள்வியையும் எழுப்பினார் திருத்தந்தை.

ஐரோப்பா உட்பட உலகம் முழுவதும் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளைச் சந்தித்து வரும் இக்காலத்தில், அப்பிரச்னையைத் தீர்ப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள், வெறும் நிதியை மட்டும் சார்ந்ததாக இருக்கக் கூடாது எனவும் திருத்தந்தைக் கேட்டுக் கொண்டார்.

1956ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய அவையின் வளர்ச்சி வங்கியில் 1973ம் ஆண்டு அங்கத்தினராகச் சேர்ந்தது திருப்பீடம்.








All the contents on this site are copyrighted ©.