2010-06-12 15:04:26

பாலர் தொழில்முறையை அகற்றுவதற்கு ஐ.நா.நிறுவனங்கள் அழைப்பு


ஜூன்12,2010 உலகில் 5க்கும் 14 வயதுக்கும் உட்பட்ட ஏறக்குறைய 15 கோடிச் சிறார் தொழிலாளர்கள் இன்னும் வேலை செய்கின்ற வேளை, சிறார் தொழிலாளர்முறை முடிவுக்குக் கொண்டுவரப்படுவதற்கு அரசுகளும் தனியார் அமைப்புகளும் உதவுமாறு கேட்டுள்ளது யூனிசெப் நிறுவனம்.

இஞ்ஞாயிறன்று கடைபிடிக்கப்படும், சிறார் தொழிலாளருக்கு எதிரான சர்வதேச நாளை முன்னிட்டு இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளது ஐ.நா.வின் குழந்தை நல நிதி நிறுவனமான யூனிசெப்.

கல்வி, வறுமை ஒழிப்பு, பாலியல் சமத்துவம், எய்ட்ஸ் நோய் ஒழிப்பு உட்பட மில்லெனேய வளர்ச்சித்திட்ட இலக்குகளை நிறைவேற்றுவதற்கு நாடுகள் எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டும் அதேவேளை, சிறார் தொழில்முறை இன்னும் நடைமுறையில் இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார் யூனிசெப்பின் சிறார் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் சூசன் பிஸ்ஸெல்.

அரசியல் ரீதியாக மட்டும் இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது என்றுரைத்த பிஸ்ஸெல், அனைத்து மட்டங்களிலும் இதற்கு ஒத்துழைப்பு தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார்.

சிறார் தொழிலாளர் ஒழிப்புமுறை தினம் 2002ம் ஆண்டில் முதன்முறையாகக் கடைபிடிக்கப்பட்டதற்குப் பின்னர் இதில் முன்னேற்றம் காணப்பட்டாலும், இன்னும் உலகில் 5க்கும் 17 வயதுக்கும் உட்பட்ட ஏறக்குறைய 21 கோடியே 50 இலட்சம் சிறார் தொழிலாளர்கள் உள்ளனர் என்று உலக தொழில் நிறுவனம் அறிவித்துள்ளது.

சிறார் தொழிலாளருக்கு எதிரான சர்வதேச நாள், 2002ம் ஆண்டிலிருந்து ஜூன் 12ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.








All the contents on this site are copyrighted ©.