2010-06-12 15:02:06

திருச்சபை விழாக்கள் மிகவும் எளிமையாகவும் ஆன்மீக உணர்வுகளை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் - கேரள ஆயர்கள்


ஜூன்12,2010 திருச்சபை விழாக்கள் மிகவும் எளிமையாகவும் ஆன்மீக உணர்வுகளை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்று கேரள கத்தோலிக்க ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருச்சபை விழாக்கள் தற்சமயம் ஆன்மீகம் குறைந்து வியாபாரமாக, மிகுந்த ஆடம்பரமாக நடைபெற்று வருகின்றன, இதனைச் சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று கேரள ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஆன்ட்ரூஸ் தழத் கூறினார்.

விழாக்களில் இடம்பெறும் வானவேடிக்கைகள், போக்குவரத்து நெருக்கடிகள், நீண்ட பவனிகள், அலங்கார வளைவுகள் போன்றவைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறித்த விழிப்புணர்வு தேவை எனவும் கேரளாவின் சுமார் 50 இலட்சம் கத்தோலிக்கரிடம் கூறியுள்ளனர் ஆயர்கள்.

திருச்சபையில் கொண்டாடப்படும் விழாக்கள் கிறிஸ்தவச் சமூகத்தின் ஆன்மீகத்தைத் தட்டி எழுப்பி அதனைப் புதுப்பிப்பதாக இருக்க வேண்டும் என்று கேரள ஆயர்கள் இவ்வாரத்தில் நிறைவு செய்த கூட்டத்தில் வலியுறுத்தினர்.

கேரள மாநிலத்தில் மதுபானம் அருந்துவோரின் எண்ணிக்கை அதிகம் என்பதால், இதனைக் குறைப்பதற்குப் பங்குத்தளங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் ஆயர்கள் கேட்டுள்ளனர்.

கேரளாவின் 3 கோடியே 50 இலட்சம் பேரில் 19 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.








All the contents on this site are copyrighted ©.