2010-06-11 15:42:51

அறநெறிக் கூறுகளை உள்ளடக்காத பொருளாதார நுட்பங்கள், ஆக்கப்பூர்வமானத் தீர்வுகளுக்கு இட்டுச் செல்லாது - வத்திக்கான் உயர் அதிகாரி


ஜூன்11,2010 அறநெறிக் கூறுகளை உள்ளடக்காதப் பொருளாதார நுட்பங்கள், தெளிவான மற்றும் ஆக்கப்பூர்வமானத் தீர்வுகளுக்கு இட்டுச் செல்லாது என்று, பன்னாட்டு தொழில் கருத்தரங்கில் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பன்னாட்டுத் தொழில் கருத்தரங்கின் 99வது அமர்வில் இவ்வியாழனன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும்பிற சர்வதேச நிறுவனங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதி பேராயர் சில்வானோ தொமாசி, தனியாட்களையும் குடும்பங்களையும் மிகவும் பாதித்துள்ள தற்போதைய உலகளாவிய நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியின் எதிர்நிலை விளைவுகள் குறித்து விளக்கினார்.

இந்த நெருக்கடிகளால், 2015ம் ஆண்டில், ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதியில் இரண்டு கோடிக்கு மேற்பட்டவர்களும் உலக அளவில் 5 கோடியே 30 இலட்சம் பேரும் கடுமையான வறுமையில் வாழவேண்டியிருக்கும் என்றும் கூறிய பேராயர் தொமாசி, இவை, அமைப்புமுறை சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுக்கின்றன என்றார்.

92 நாடுகளில், 75 விழுக்காட்டிற்கு மேற்பட்ட உள்நாட்டு உற்பத்தியும், 200 கோடி முதல் 250 கோடிப்பேரின் வருவாயும் வேளாண்மையைச் சார்ந்து இருக்கின்றது என்றும் பேராயர் விவரித்தார்.

வேலைவாய்ப்பற்ற இளையோரின் எண்ணிக்கை 2008க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் 85 இலட்சமாக அதிகரித்திருந்தது, இந்த அதிகரிப்பு, கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகம் என்பதையும் பேராயர் தொமாசி கோடிட்டுக் காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.