2010-06-07 16:04:06

3 நாள் திருப்பயணத்தை நிறைவு செய்து வத்திக்கான் நகர் திரும்பினார் திருத்தந்தை


ஜூன்07, 2010 சைப்ரஸ் நாட்டில் 3 நாள் திருப்பயணத்தை நிறைவு செய்து இஞ்ஞாயிறு இரவு வத்திக்கான் நகர் வந்தடைந்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
சைப்ரஸ் நாட்டின் வழியனுப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளூர் நேரம் மாலை 6.15 மணிக்கு அதாவது இந்திய நேரம் இரவு 8.45 மணிக்கு லர்நாக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட திருத்தந்தை 3மணி நேர பயணத்திற்குப் பின் ரோம் நகர சம்பினோ விமானத்தளம் வந்தடைந்தார்.
விமானத்தளத்தில் இத்தாலிய பிரதமரின் சார்பில் அவரின் நேரடித்துணைச் செயலர் Gianni Letta வந்திருந்து திருத்தந்தையை ஏனைய தலத்திருச்சபை அதிகாரிகளுடன் வரவேற்றார்.
3 நாள் திருப்பயணத்திற்குப் பின் இத்தாலித் திரும்பியுள்ள திருத்தந்தைக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பிய இத்தாலிய அரசுத்தலைவர் ஜியார்ஜியோ நாப்பொலித்தானோ, அதில் சர்வதேச உயர் மதிப்பீடுகளுக்கு மனிதக்குலத்தை திருத்தந்தை மீண்டும் ஒருமுறை இத்திருப்பயணத்தின் போது அழைப்பு விடுத்துள்ளதற்கு தன் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். இத்தாலிய அரசு வழங்கிய அடையாள வரவேற்பில் கலந்துகொண்டு அங்கிருந்த தலத்திருச்சபை அதிகாரிகளுக்கும் வாழ்த்துக் கூறிய பின்னர் உள்ளூர் நேரம் இரவு 8.40 மணிக்கு சம்பினோ விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு வத்திகான் வந்தடைந்தார் பாப்பிறை. இத்துடன் அவரின் சைப்ரஸ் நாட்டிற்கான 3 நாள் திருப்பயணம் அதாவது அவரின் 16வது வெளிநாட்டுத் திருப்பயணம் நிறைவுக்கு வந்தது.







All the contents on this site are copyrighted ©.