திருத்தந்தை தற்போது பயணம் மேற்கொண்டுவரும் சைப்ரஸ் நாட்டைக்குறித்து சிறு தகவல்
ஜூன்04,2010. துருக்கிக்கு 75 கிலோ மீட்டர் தெற்கேயும் சிரியாவிற்கு 105 கிலோமீட்டர்
மேற்கேயும் எகிப்துக்கு 380 கி.மீட்டர் வடக்கேயும் கிரேக்க நாட்டிலிருந்து 800 கிலோ மீட்டர்
கிழக்கேயும் உள்ள தீவுநாடு சைப்ரஸ். 9251 சதுர கிலோ மீட்டர்களைக் கொண்ட இந்நாட்டில் 1733
சதுர கிலோ மீட்டர் காடுகளாகும். 11,000 ஆண்டு தொன்மை வரலாற்றைக் கொண்ட இந்நாடு 1960ம்
ஆண்டில் தான் சுதந்திரம் பெற்ற இளையக் குடியரசாகும். இது ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும்
ஆசியக் கண்டங்களின் சந்திப்புச் சாலையாக நிற்கின்றது. 7இலட்சத்து 94,000 மக்கள்தொகையைக்
கொண்ட இத்தீவு நாட்டில் 80.7 விழுக்காட்டினர் கிரேக்க சைப்ரியர்கள், 11 விழுக்காட்டினர்
துருக்கிய சைப்ரியர்கள். 66,000 வெளிநாட்டவர்களும் உள்ளனர். நிக்கோஸியா என்ற இந்நாட்டுத்
தலைநகர் 1974ம் வருட துருக்கிய ஆக்ரமிப்பிற்குப் பின்னர் இரண்டாகப் பிரிந்தது. நாட்டின்
மொத்த நிலப்பகுதியில் 36 விழுக்காடு துருக்கிய சைப்ரஸாக உள்ளது.கிறிஸ்தவ வரலாற்றைப் பார்த்தோமானால்
அப்போஸ்தலர்கள் பவுல், பர்ணபா என்பவர்கள் கி.பி. 45ம் ஆண்டிலேயே புனித மாற்குவுடன் அங்கு
நற்செய்தி அறிவிக்க வந்துள்ளனர். சாலமி நகரில் கரை இறங்கிய இவர்கள் பஃபோசு சென்று ரோமைய
ஆளுனர் செர்கியு பவுலை திருமறைக்குத் திருப்பினர். இதன்படி பார்த்தால் உலகிலேயே முதல்
கிறிஸ்தவ ஆட்சியாளர் இவர்தான்.