மே29,2010 பற்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது இதய நலத்துக்கும் உதவுகிறது என புதிய ஆராய்ச்சியில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குபவர்களுடன் ஒப்பிடும்போது,
அப்படி பல்துலக்காதவர்கள் இதய நோயால் பாதிக்கப்படும் அபாயத்தை இரண்டு மடங்கு அதிகமாக
எதிர்கொள்வதாக, பிரிட்டனில் இருக்கும் மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் பிரிட்டிஷ் மருத்துவ
பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது.
பல் துலக்குவதற்கும், இதய நோய் மற்றும்
பக்கவாத நோய்க்கும் இருக்கும் நேரடி தொடர்பு குறித்து விரிவான மருத்துவ ஆய்வுகள் செய்யப்படுவது
இதுவே முதல்முறை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சோதனைகளின் முடிவின்படி,
ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை பல் துலக்குபவர்களோடு ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு
ஒரு முறைகூட பல் துலக்காதவர்கள் இதய நோயால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எழுபது
சதவீதம் அதிகமிருப்பது தெரியவந்திருக்கிறது.
முறையாக பல் துலக்காததன் காரணமாக
வாயில் புண்ணை ஏற்படுத்தும் பாக்டீரியாவானது, இரத்ததில் கலந்து இரத்த நாளங்களில் செல்லும்போது,
அது இரத்தநாளங்களில் அடைப்பை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.