மே. 26. 2010. குருக்களின் ஆண்டு நிறைவுக்கு வர உள்ள இவ்வேளையில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்,
குருத்துவப் பண்புகள் குறித்தே இவ்வாரப் புதன் பொது மறைபோதகத்தில் எடுத்துரைத்தார்.
தன் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருக்கும்
ஆடுகளை இயேசு கிறிஸ்துவின் பெயரால் நிர்வகிக்கும் பணி குறித்து இப்போது உங்களுடன் உரையாட
விழைகிறேன் . கிறிஸ்தவப் புரிந்துகொள்ளுதலின் படி, அதிகாரம் என்பது மனிதனின் உண்மையான,
முடிவற்ற நன்மைத்தனத்திற்கான பணியாகும். நல்லாயனாம் கிறிஸ்துவின் அக்கறையையும் தொடர்ந்த
இருப்பையும் வெளிப்படுத்தும் மற்றும் அவர் பெயரால் நிறைவேற்றப்படும், கிறிஸ்துவிலான நம்
மீட்பிற்கானது இப்பணி. குருத்துவத்தில் வழங்கப்பட்ட ஆன்மீக அதிகாரமானது, குருவின் மேய்ப்புப்
பணிக்கு உள்ளார்ந்த வகையில் அவர் விசுவாசமாக இருப்பதோடும் தன் தலைவராம் கிறிஸ்துவைக்
கீழ்ப்படிதலுடன் பின் தொடர்ந்துச் செல்லத் தயாராக இருப்பதோடும் ஒத்திணங்கிச் செல்வதாக
இருக்க வேண்டும். விசுவாச ஒளியில் புரிந்துக் கொள்ளப்படும் இவ்வதிகாரமானது, வல்லமைச்
செயல்பாட்டை உள்ளடக்கியிருந்தாலும், திருச்சபையைப் புனிதத்திலும், ஐக்கியத்திலும் உண்மையிலும்
கட்டியெழுப்பும் பணியாக உள்ளது. கிறிஸ்துவின் வல்லமையானது பாதங்களைக் கழுவியதிலும், அவரின்
அரச நிலையானது சிலுவை மரத்தாலும் வெளிப்படுத்தப்பட்டது. அது போல் நிர்வாகத்திற்கான குருவின்
பணியானது, பிறரன்பு மேய்ப்புப் பணியில் வெளிப்படுத்தப்பட வேண்டும். நற்செய்தியின் உண்மைக்கும்
அதன் நம்பிக்கைச் செய்திக்கும் சாட்சியாக விளங்கி, மக்களை இறைவனை நோக்கி வழிநடத்தும்
குருக்களின் பணியில் ஆதரவுடன் செயல்படுமாறு உங்கள் அனைவரையும் வேண்டுகிறேன்.
திருச்சபையில்
என்னுடைய நிர்வாகப்பணிகளுக்காகவும், குருக்கள் ஆண்டிறுதிக் கொண்டாட்டங்கள் ஆன்மீகக் கனிகளைக்
கொணர வேண்டும் எனவும் ஜெபிக்குமாறு உங்களை வேண்டுகிறேன் என் தன் புதன் பொது மறைபோதகத்தை
வழங்கினார் திருத்தந்தை.
புதன் பொது மறைபோதகத்தின்
இறுதியில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த அனைவரையும் வாழ்த்தி அனைவருக்கும்
தன் ஆசீரையும் அளித்தார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.