இலங்கைக்கானத் திருப்பீடத் தூதர், : அமைதிக்கான பாதையில் இன்னும் நெடுந்தூரம் பயணம் செய்ய
வேண்டியிருக்கிறது
மே18,2010 இலங்கைத் திருச்சபை அமைப்புமுறைகளை மீண்டும் கட்டி எழுப்புவதில் மட்டுமல்ல,
அந்நாட்டில் நீண்டகால உள்நாட்டுப் போரால் துன்புற்ற மக்களின் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிப்பதிலும்
பெரும் தடைகளை எதிர்நோக்கி வருகிறது என்று இலங்கைக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Joseph
Spiteri தெரிவித்தார்.
இலங்கை மக்கள் அனைவரும் சேர்ந்து பயணம் செய்வதற்கு வடபகுதியில்
இன்னும் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது
என்றும் பேராயர் ஸ்பித்தேரி
கூறினார்.
யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகத்தின் அழைப்பின்பேரில் யாழ்ப்பாணம்,
திரிகோணமலை, மட்டக்களப்பு மன்னார் ஆகிய இடங்களில் அமைந்திருக்கின்ற புலம்பெயர்ந்த மக்களின்
முகாம்கள், கருணை இல்லங்கள், குருத்துவ இல்லங்கள், பங்குகள் ஆகியவற்ரில் மேய்ப்புப்பணி
பயணம் மேற்கொண்ட திருப்பீடத் தூதர் பேராயர் Spiteri இவ்வாறு கூறினார்.
போரில்
பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கத்தோலிக்கத் திருச்சபை செய்துவரும் செயல்கள் குறித்து தான்
திருப்தியடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண காரித்தாஸின் முயற்சியினால்
தொடங்கப்பட்ட "Vic-Jaf Fishnet" என்ற திட்டத்தையும் தொடங்கி வைத்த பேராயர் ஸ்பித்தேரி,
யாழ்ப்பாணத் தீபகற்பத்திலுள்ள மீனவச் சமுதாயத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம்
குறித்துத் தான் மகிழ்வதாகவும் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் சுனாமி மற்றும் போரினால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கென "Vic-Jaf Fishnet" திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.