ஆண்டவரின் விண்ணேற்றம் - இரண்டாம் வாசகம். எபிரே 9 : 24-28, 10,19-23
சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும் உண்மையான தூயகத்திற்கு
முன்னடையாளமாய் இருப்பதுமான இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே
நுழைந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார்.25 தலைமைக்குரு
விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து
தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை.26 அவ்வாறு
செய்திருப்பாரென்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்கவேண்டும்.
அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப்
போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார்.27 மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர்.
பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கெனவுள்ள நியதி.28 அவ்வாறே, கிறிஸ்துவும்
பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர்
மீண்டும் ஒருமுறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு
மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார். சகோதர சகோதரிகளே, இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச்சீலைக்கு
ஒப்பிடலாம். இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்துக்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு.20
ஏனெனில் அவர் இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே
வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி.21 மேலும் கடவுளுடைய இல்லத்தின்மீது அதிகாரம் பெற்ற
பெரிய குரு ஒருவர் நமக்கு உண்டு.22 ஆதலால், தீய மனச் சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட
உள்ளமும் தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும் மிகு உறுதியான
நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக.23 நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர்.