2010-05-12 16:22:41

இலங்கையின் போர்க்கால அகதிகள் சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கு ஆவன செய்யப்பட வேண்டும் - இந்தியத் தூதர்


மே12,2010 இலங்கையின் போர்க்கால அகதிகள் தங்களது சொந்தக் கிராமங்களுக்குத் திரும்புவதற்கு ஆவன செய்யப்படுமாறு இலங்கையிலுள்ள இந்தியத் தூதர் Ashok Kantha கொழும்பு பேராயர் மால்கம் இரஞ்ச்சித்திடம் வலியுறுத்தினார்.

கொழும்புவில் கடந்த வாரத்தில் பேராயர் மால்கம் இரஞ்ச்சித்தைச் சந்தித்துப் பேசிய போது இவ்வாறு தெரிவித்தார் இந்திய உயர்மட்ட அதிகாரி Kantha.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் குடியமர்த்துதல், அவர்களின் வாழ்க்கை நிலைகளை உயர்த்துதல், நாட்டின் பொருளாதார வளர்ச்சி போன்ற விவகாரங்கள் குறித்தும் இச்சந்திப்பில் பேசினார் காந்தா.

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே மிகுந்த நம்பிக்கை இருக்கின்றது என்றும், தற்சமயம் இலங்கை புதிய அத்தியாயத்தைத் திறந்து நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கானச் சிறப்பான வாய்ப்பைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இலங்கையை முன்னேற்றுவதற்கு இந்தியா உதவி செய்வதற்குத் தயாராக இருப்பதாகவும் காந்த கூறினார்.

கொழும்பு பேராயரும், இலங்கை தமிழ்ச் சமுதாயம் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி புதிய வாழ்வைப் பெற அரசு உதவும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.








All the contents on this site are copyrighted ©.