சமுதாயம் எதிர்நோக்கும் குடியேற்றதாரர் குறித்த பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஆய்வுகளில்
பள்ளிகள் ஈடுபட வேண்டும் - பேராயர் மரிய வெலியோ
மே10,2010 மக்களின் பன்மைத்தன்மையை வரவேற்று போற்றி வளர்ப்பதற்கான திறமைகளில் மக்களுக்குப்
பயிற்சி கொடுப்பதில் முனைந்து நிற்கும் இத்தாலிய கல்வி நிறுவனங்கள், அவை இந்தத் தம் பணிகளைத்
திறம்படச் செய்வதற்கு உதவிகள் செய்யப்பட வேண்டும் என்று திருப்பீட குடியேற்றதாரர் அவைத்
தலைவர் பேராயர் அந்தோணியோ மரிய வெலியோ கூறினார்.
இத்தாலியின் மிலான் கத்தோலிக்கப்
பல்கலைகழகத்தில் நடைபெற்ற குடியேற்றதாரர் குறித்த கருத்தரங்கில் இத்திங்களன்று உரையாற்றிய
பேராயர் வெலியோ, தற்போது சமுதாயம் எதிர்நோக்கும் முக்கியமான குடியேற்றதாரர் குறித்த பிரச்சனைகளைத்
தீர்ப்பதற்கான ஆய்வுகளில் பள்ளிகள் ஈடுபட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
ஜனநாயகம்,
மனித உரிமைகள், அமைதி, சுற்றுச்சூழல், ஒத்துழைப்பு, சர்வதேச புரிந்து கொள்ளுதல், ஏழ்மையை
அகற்றுதல், பல்சமய உரையாடல், உறுதியான வளர்ச்சி தொடர்புடைய விவகாரங்கள் போன்றவைகள் பற்றி
ஆராய்ச்சிகள் நடத்துவதற்கும் அவற்றைப் போதிப்பதற்கும் பள்ளிகளுக்கு உதவிகள் அவசியம் என்றும்
பேராயர் கூறினார்.
வரிக் கொள்கை, வீட்டுவாரியம், கண்காணிப்பு, சமூகப் பாதுகாப்பு,
நலவாழ்வு, அனைவருக்கும் வாழ்வு போன்ற விவகாரங்களிலும் புதிய கொள்கைகள் வரையறுக்கப்பட
வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.