ஒரு தாய், மேல்நிலை கல்வியை முடித்த தனது மகனிடம், நீ, பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள்
வாங்க யார் காரணம் என்று கேட்டாள். அதற்கு அவன், நான்தான் என்றான். மகனின் பதில் அந்தத்
தாயை அதிகமாகவே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில் பாடம் கற்பித்த ஆசிரியர்களையோ அல்லது
பெற்றோர்களையோ காரணமாகச் சொல்வான் என்று அவள் எதிர்பார்த்தாள். அந்தத் தாய் அந்த அதிர்ச்சியிலிருந்து
மீள்வதற்கு முன்னரே மகன் சொன்னான் – அம்மா, கொஞ்சம் புரியும்படி சிந்தித்துப் பாருங்கள்.
அதே பள்ளிக்கூடம், அதே பெற்றோர், அதே ஆசிரியர்கள். நான் நன்றாகப் படிக்க வேண்டுமென்பதற்காக
கீழ் வகுப்புகளில் நீங்கள் என்னை அடித்தீர்கள், புத்தி சொன்னீர்கள். ஆனால் உங்களையெல்லாம்
வியக்கவைக்கும் மதிப்பெண்களை நான் பெறவில்லை. எனினும் மேனிலை வகுப்புகளில் நான் அதிக
மதிப்பெண்கள் வாங்கினேன். அதற்கு எனது சொந்த முயற்சி, கடின உழைப்பு போன்றவை 90 விழுக்காடு
காரணம். உங்கள் அனைவருக்கும் என்றால் 10 விழுக்காட்டைத் தருகிறேன் என்றான்.
ஆம்.
இதுதான் ஒரு தனிமனிதனுடைய பலம். வெளிப்புற சக்திகள் யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும்
அவை ஒரு குறிப்பிட்ட அளவுதான் மனிதனைக் கட்டாயப்படுத்த முடியும். முயற்சிக்கேற்ற முன்னேற்றம்
உண்டு. செயலுக்கேற்ற விளைவு உண்டு.