இளையோர் வாழ்க்கையை முழுமையாக வாழ திருத்தந்தை அழைப்பு
மே03,2010 தூரின் நகரில் சான் கார்லோ வளாகத்தில் இஞ்ஞாயிறு மாலை இளையோரைச் சந்தித்தத்
திருத்தந்தை வாழ்க்கையை முழுமையாக வாழவும், கிறிஸ்துவுக்குச் சாட்சி பகரவும் வேண்டுமென
அவர்களைக் கேட்டுக் கொண்டார்.
மழைத் தூரிக் கொண்டிருந்தாலும் குடைகளைப் பிடித்துக்
கொண்டு தமது உரையைக் கேட்டுக் கொண்டிருந்த இளையோரிடம், இந்தப் புனிதத் துணியானது நீங்கள்
உங்கள் உணர்வுகளில் இறையன்பைப் பதிப்பதற்குச் சிறப்பாக அழைப்பு விடுக்கின்றது, இதன் மூலம்
நீங்கள் நீங்களாக இருக்கவும், உங்களது சுற்றுச் சூழல்களில், உங்கள் வயதையொத்தவர்களில்
கிறிஸ்துவின் முகத்தை நம்பத்தகுந்த வகையில் வெளிப்படுத்தவும் முடியும் என்று கூறினார்.
2011ம்
ஆண்டு ஆகஸ்டில் மத்ரித்தில் நடைபெறவிருக்கின்ற அடுத்த உலக இளையோர் தினத்தை நினைவுபடுத்தி
அங்கு அவர்களைத் தாம் சந்திக்கவிருப்பதையும் நினைவுபடுத்தினார் திருத்தந்தை.
இருபது
ஆண்டுகளுக்கு முன்னர் முத்திப் பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்பட்ட 24 வயதாகும் மாணவரான
Piergiorgio Frassati என்பவரை இளையோர் தங்களுக்கு முன்மாதிரிகையாய்க் கொள்ளுமாறும் பரிந்துரைத்தார்.
தொமினிக்கன்
மூன்றாம் சபையைச் சேர்ந்தவரும் கத்தோலிக்கக் கழக உறுப்பினருமான Frassati திருவருளாலும்
இறையன்பாலும் சூழப்பட்டிருந்தார் என்றும் கிறிஸ்துவுக்கும் பிறருக்கும் சேவையாற்றுவதில்
மகிழ்ச்சியைக் கண்டார் என்றும் அவர் கூறினார்.