2010-04-27 15:27:32

விவிலியத் தேடல் - திருப்பாடல்கள்


RealAudioMP3 பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்

என் ஜீவ ராகம் கரைந்தோடுமே...

பத்தாண்டுகளுக்கு முன் ஒரு நாள் மாலைத் திருப்பலி நேரத்தில் மக்களோடு சேர்ந்து இந்தப் பாடலை நான் பாடிக் கொண்டிருந்த போது, எனக்குள் ஒரு எண்ணம் உதித்தது.

அந்தப் பாடல் வரிகள் கூறியதைப் போல், நான் பாடிக் கொண்டிருக்கும் போது என் வாழ்வு அப்படியே கரைந்து காற்றில் கலந்துவிட்டால் எப்படி இருக்கும் என்று எண்ணினேன். இன்றும் அந்த எண்ணம் மனதில் பதிந்துள்ளது.

வாழ்வில் அனுபவித்து, முழு மனதோடு ஒரு செயலைச் செய்யும் அந்த வேளையில் வாழ்வு முடிந்தால் ஒரு நிறைவோடு உலகை விட்டுச் செல்லலாம் அல்லவா? எனக்குத் தெரிந்து பலர் மனதுக்குப் பிடித்த ஒரு செயலில் ஈடுபட்டிருந்த போது இந்த உலகை விட்டுச் சென்றிருக்கிறார்கள். அது போலவே நானும் இந்த உலகை விட்டுச் செல்ல விரும்புகிறேன்.

என் மனதுக்கு அதிகம் நிறைவைத் தரும் ஒரு செயல் இசை சம்பந்தப்பட்டது. ஒரு பாடலைக் கேட்டபடியே, அல்லது ஒரு பாடலை பாடியபடியே இந்த உலகத்திலிருந்து விடை பெற்றால் நான் மிக மகிழ்வேன். அந்த பாடலோடு, ராகத்தோடு அப்படியே கரைந்து காற்றில் சென்று விட வேண்டும்... அந்த அளவுக்கு இசையில் எனக்கு ஈடுபாடு உண்டு.

என்னைப் போல், என்னையும் விட இசையில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்கள் உங்களில் பலர் இருக்கலாம். இசையைக் கேட்க, அல்லது பாடி மகிழ விரும்பாத மனிதர்கள் மிகச் சிலராகத் தான் இருக்க முடியும் என்பது என் கணிப்பு.

"இசையால் வசமாகா இதயம் எது... இறைவனே இசை வடிவம் எனும் போது... "

தமிழில் எனக்கு மிகவும் பிடித்த பக்திப் பாடல்களில் இதுவும் ஒன்று.

இசையும் மதமும், இசையும் கடவுளும் மிக நெருங்கியவர்கள். அதிலும் சிறப்பாக இந்திய மரபில், தமிழ் மரபில் இசை ஒரு தெய்வீக வடிவம் பெற்றுள்ளது. கடவுளே இசை வடிவம் என்பது நம் மரபு.

யூத மரபிலும் மதமும் இசையும் மிக அதிகத் தொடர்புடையவை. திருப்பாடல்கள் நூல் இசையோடு பாடப்பட வேண்டியவை. சென்ற விவிலியத் தேடலில் திருப்பாடல்கள் அழகான எபிரேயக் கவிதைகள் என்று சிந்தித்தோம். இன்று, திருப்பாடல்கள் இசையோடு பாடக்கூடியவை என்பதை சிந்திப்போம்.



யூத இசை தனிப்பட்டவர் பாடுவது, அனைவரும் பாடுவது, இசைக் கருவிகள் மட்டும் இசைப்பது என்று மூன்று வகைப்படும். நெவேல், கின்னோர், ஷோபார், ஹலில் (Nevel, Kinnor, Shofar, Halil) என்று பன்னிரு இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொழுகைக் கூடத்தில் பாடுவதற்கு பன்னிரு ஆண்கள் அனுமதிக்கப்பட்டனர்.



நாம் இன்றைய திருவழிபாடுகளில் பயன்படுத்தும் பாடல் புத்தகங்களைப் போல், திருப்பாடல்கள் நூல் யூதர்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டது. பல திருப்பாடல்களின் ஆரம்பத்தில் அந்த பாடல் எதற்காக எழுதப்பட்டது, எந்த இசைக்கருவியுடன், எந்த ராகத்தில் பாடப்பட வேண்டும் என்ற குறிப்புகள் உள்ளன.

திருப்பாடல் 4ன் துவக்கத்தில் காணப்படும் குறிப்பு இது: பாடகர் தலைவர்க்கு; நரம்பிசைக் கருவிகளுடன்; தாவீதின் புகழ்ப்பா. திருப்பாடல் 6ன் துவக்கத்தில் இன்னும் விரிவான ஒரு குறிப்பு காணப்படுகிறது: பாடகர் தலைவர்க்கு; நரம்பிசைக் கருவிகளுடன்; எட்டாம் கட்டையில்; தாவீதின் புகழ்ப்பா.

திருப்பாடல்களின் பல வரிகளில் பாடுவேன், ஆடிப் பாடுவேன், பாடுங்கள் என்ற வார்த்தைகள் பல முறை பயன்படுத்தப்பட்டுள்ளன. அவைகளில் ஒருசில எடுத்துக்காட்டுகள் இதோ:

திருப்பாடல் 9: 1-2

(பாடகர் தலைவர்க்கு; 'மகனுக்காக உயிரைக்கொடு' என்ற மெட்டு; தாவீதின் புகழ்ப்பா)

ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்: வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன். உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களி கூர்வேன்: உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவேன்.



திருப்பாடல் 95: 1-2

வாருங்கள்: ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்: நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்: புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்.

இதேபோல், திருப்பாடல்கள் 30, 67, 149 என பல பாடல்களிலும் பாடுவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருப்பாடல்கள் நூலின் இறுதிப்பாடலான 150ம் சங்கீதம் முழுவதுமே இசையில் நம்மை கரைத்துக் கொள்ள, இறைவனை நாவார, மனதார போற்றிப் பாட நமக்கு விடப்படும் ஒரு அழகான அழைப்பு.

திருப்பாடல் 150

அல்லேலூயா! தூயகத்தில் இறைவனைப் போற்றுங்கள்! எக்காளம் முழங்கியே அவரைப் போற்றுங்கள்! வீணையுடன் யாழிசைத்து அவரைப் போற்றுங்கள். மத்தளம் கொட்டி நர்த்தனம் செய்து அவரைப் போற்றுங்கள்! யாழினை மீட்டி, குழலினை ஊதி அவரைப் போற்றுங்கள்! சிலம்பிடும் சதங்கையுடன் அவரைப் போற்றுங்கள்! கலீர் எனும் தாளத்துடன் அவரைப் போற்றுங்கள்! அனைத்து உயிர்களே, ஆண்டவரைப் புகழ்ந்திடுக! அல்லேலூயா!

மொத்தத்தில் இது இஸ்ராயலர்கள் அதிகம் பயன்படுத்திய ஒரு பாடல் புத்தகம் என்பதை எளிதில் உணரலாம். எருசலேம் கோவில் அழிக்கப்பட்டபோது இஸ்ராயலர்கள் மத்தியில் இசையும் பாடலும் அழிந்து விடும் ஆபத்து வந்தது.

எருசலேம் கோவில் அழிக்கப்பட்டதும், பாபிலோன், பெர்சியா ஆகிய நாடுகளில் அடிமைகளாக இஸ்ராயலர்கள் இருந்த போது, இசை அவர்கள் மத்தியில் ஒலிக்கக் கூடாதெனும் சட்டம் இயற்றப்பட்டது. சட்டங்களாலும், அடக்கு முறைகளாலும் இசையை அழித்து விட முடியுமா என்ன? மௌனமாகத் தங்கள் அடிமைத்தனத்தை ஏற்று வாழ வேண்டும் என்று அந்நிய நாட்டுச் சட்டங்கள் இருந்தாலும், யூதர்கள் மனதில் இசை ஒலித்துக் கொண்டே இருந்திருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு அதிகம் உதவியாக இருந்தது திருப்பாடல்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

யூதர்களைக் கொன்று குவித்த நாத்சி வதை முகாம்களில் நடந்த ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. அங்கு கைது செய்யப்பட்டிருந்த பல கைதிகள் மத்தியில் வயலின் வாசிக்கத் தெரிந்த ஒருவர் முதல் நாள் இரவு தன் இசைக் கருவியை வாசித்தபடி பாடல்கள் பாடினார். முகாமில் இருந்த கைதிகள் அவரைச் சுற்றி நின்று பாடலை ரசித்தனர். சேர்ந்து பாடினர். பாடலை நிறுத்தி விட்டு அவர்களைக் கலைந்து போகச் சொன்னார்கள் சிறை அதிகாரிகள்.

அடுத்த நாள் இரவு அவர் மீண்டும் தன் இசைக் கருவியுடன் பாடிக் கொண்டிருந்தபோது, அதிகாரிகள் வந்து அவரது இசைக் கருவியை உடைத்து எறிந்தனர். இசைக் கருவியை வாசித்த அவரது விரல்களை வெட்டினர். கைதிகள் அதிர்ச்சியில் கலைந்து சென்றனர்.

அடுத்த நாள், விரல்கள் வெட்டப்பட்ட நிலையில் அவர் அந்த வளாகத்தில் வந்து பாட ஆரம்பித்தார். மற்றவர்களும் சேர்ந்து பாடினர். அதிகாரிகள் வந்து அவரை இழுத்துச் சென்று, அவரது நாக்கை வெட்டினர். முகாம் முழுவதும் அதிர்ச்சியில், மௌனத்தில் உறைந்தது.

அடுத்த நாள் விரல்களும், நாவும் வெட்டப்பட்ட அந்த பாடகர் மீண்டும் வளாகத்திற்கு வந்தார். மற்ற கைதிகளும் அச்சத்துடன், ஒருவித எதிர்பார்ப்புடன் சுற்றி வந்து நின்றனர். அந்தப் பாடகர் கண்களை மூடி, தன் மனதில் எழுந்த ஓர் இசையை எழுப்பி அந்த இசைக்குத் தகுந்தது போல் வார்த்தைகள் எழாத தன் வாயைத் திறந்து, தெளிவில்லாத ஒரு குரலில் பாடி, உடலை அசைத்து, ஆட ஆரம்பித்தார். மற்ற கைதிகளும் அந்த ஒலியில் தங்களை இணைத்து, அவருடன் சேர்ந்து ஆடினர். இதைக் கண்டு, அதிகாரிகள் அதிர்ச்சியில், மௌனத்தில் உறைந்தனர்.

அடிமைத்தளைகளுக்கு, அடக்குமுறைகளுக்கு ஆளான எந்த ஒரு குழுவும் இசையால் வாழ்ந்துள்ளதென்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் பல உள்ளன. பழைய ஏற்பாட்டு காலம் முதல் இன்றுவரை துன்பங்களைத் தாங்கி வாழும் யூதர்கள், இஸ்ராயேலர்கள் இசையால், பாடல்களால் வாழ்ந்தது நமக்கு நல்ல பாடம். இசையை, பாடல்களை அவர்கள் மத்தியில் வளர்த்த பெருமையின் பெரும்பகுதி திருப்படால்களைச் சாரும். திருப்பாடல்கள் குறித்த நம் தேடல்கள் தொடரும்.








All the contents on this site are copyrighted ©.