சோஜன் (Sozan) என்ற சீன நாட்டு ஜென் குருவிடம் ஒரு சீடன் சென்று உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த
பொருள் என்னவென்று கேட்டான். அதற்கு அந்தக் குரு, ஓர் இறந்த பூனையின் தலை என்று பதில்
சொன்னார். ஏன் அப்படி என்று சீடன் மீண்டும் கேட்க, அந்தக்குரு, ஏனெனில் அதனுடைய விலையை
யாராலும் கூற முடியாது என்று கூறினார்.
ஓர் அரிய வைரத்தை விலைமதிக்க முடியாதது
என்று கூறுகிறோம். அதைப் போலத்தான் ஒரு மிகச் சாதாரண பொருளையும் மதிக்க முடியாது. ஒரு
மிகப்பெரிய பணக்காரனும், ஒரு சாதாரண பிச்சைக்காரனும் ஒரே தன்மையில்தான் இருக்கிறார்கள்.
ஏனென்றால் ஒருவன் செல்வத்தை அளவுக்கு அதிகமாகப் பெற்று மன நிம்மதியின்றி தவிக்கிறான்.
இன்னொருவன் பணமே இல்லாமல் தவிக்கிறான். இருவரும் ஒரே தன்மையில்தான் இருக்கிறார்கள். தவிப்பு
இருவருக்கும் பொதுவானதாக இருக்கிறது.