2010-04-24 16:12:59

மலேரியாவினால் ஆண்டுதோறும் 8,50,000 பேர் இறக்கின்றனர் - யூனிசெப்


ஏப்ரல்24,2010 கொசுவலைகளைப் பயன்படுத்துவதால் குறிப்பிடத்தக்க அளவில் மலேரியாவால் ஏற்படும் இறப்புக்களைத் தடுக்க முடியும் என்ற நிலை இருந்தும்கூட, மலேரியாவினால் ஆண்டுதோறும் 8,50,000 பேர் இன்னும் இறக்கின்றனர் என்று யூனிசெப் (UNICEF) நிறுவனத்தின் தலைவர் Ann Veneman கவலை தெரிவித்தார்.

ஏப்ரல் 25 ம் தேதி இஞ்ஞாயிறன்று இவ்வாண்டுக்கான உலக மலேரியா தினத்தைக் கடைபிடிக்கும் நாம், மலேரியாவை இவ்வாண்டு இறுதிக்குள் கட்டுபடுத்த வேண்டும் என்ற ஐ.நா.பொதுச்செயலரின் நோக்கம் நிறைவேறுவதற்கு இன்னும் 250 நாட்களே இருக்கின்றன என்றுரைத்தார்.

ஆண்டுதோறும் மலேரியாவால் ஏற்படும் இறப்புக்களில் ஏறக்குறைய 90 விழுக்காடு ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகளில் இடம் பெறுகிறது என்றும் இவ்வாறு இறப்பவர்களில் பெரும்பாலானோர் 5 வயதுக்குட்பட்ட சிறார் என்றும் Veneman கூறினார்.

2009 ம் ஆண்டின் கணக்கின்படி இந்தியாவில் 15 இலட்சம் பேர் இந்த மலேரியாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

மலேரியாவை ஒழிக்க தேவைப்படும் கொசு வலைகள் வாங்கி வழங்கும் விதமாக இருபது கோடி டாலர் நிதியாக உலக வங்கி இந்த ஆண்டு வழங்குகிறது.

இந்தியாவில் ஒரிசா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், மேற்குவங்கம், உள்ளிட்ட மாநிலங்களில் இந்த தாக்கம் அதிகம் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் சேரி மற்றும் குடிசை வாழ் பகுதிமக்களுக்கு மலேரியா தாக்க்கம் அதிகம். இந்தியாவில் மலேரியாவை ஒழிக்க பல்வேறு திட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கென பல கோடிக்கணக்கான பணம் செலவிடப்படுகிறது.

கழிவுநீர் போக்கு, குப்பை கூளங்கள், தேங்கி கிடக்கும் கழிவு நீர் , அழுகும் பொருட்களின் அழிப்பு தன்மையில் நாம் காட்டும் சுணக்கம் இவை யாவும் கொசுவை உயிர்ப்பிக்கும் மூலதனமாக அமைந்து விடுகிறது.








All the contents on this site are copyrighted ©.