ஏப்ரல்21,2010 ஆரோக்யமான சுற்றுப்புறச்சூழலின்றி ஏழ்மையையும் பசியையும் குறைப்பதும்,
மனிதனின் நல்வாழ்வை மேம்படுத்துவதும் மிகவும் கடினமே என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி
மூன் கூறினார்.
பூமித்தாயின் வளங்களை விவேகத்துடன் கையாள்வது, பத்தாண்டுகளுக்கு
முன்னர் கொண்டுவரப்பட்ட மில்லென்னிய வளர்ச்சித் திட்டங்கள் எட்டில் ஒன்று எனக் குறிப்பிட்ட
மூன், நமது ஒரே அன்னையாகிய பூமித்தாய் நெருக்கடியில் இருக்கிறாள் என்று கூறினார்.
ஏப்ரல்
22ம்தேதி இவ்வியாழனன்று பூமித்தாய் தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள
ஐ.நா.பொதுச் செயலர் மூன், வெப்பநிலை மாற்றம், ஓசோன் வாயுமண்டலத்தில் ஓட்டைகள் அதிகரித்து
வருவது, சுத்த நீரும் கடல் வளங்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது, மண் வளம் குறைந்து
வருவது ஆகிய நிலைகளையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
2015ம் ஆண்டுக்குள் மில்லென்னிய
வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவது குறித்த கருத்தரங்கு வருகிற செப்டம்பரில் இடம்பெறவிருப்பதையும்
மூன் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பூமித்தாய் மதிக்கப்பட்டு அவள்
மீது அக்கறை செலுத்துவதற்கு உலக அரசுகளையும் தொழில்துறையினரையும் அனைத்து குடிமக்களையும்
இந்தப் பூமித்தாய் தினத்தில் கேட்டுக்கொள்வதாக பான் கி மூன் கூறியுள்ளார்.