2010-04-19 14:40:29

திருத்தந்தைக்கு மால்ட்டா குடியரசுத் தலைவர் பாராட்டு.


ஏப்ரல்19,2010. திருத்தந்தை 16ம் பெனடிக்டின் மால்ட்டாவுக்கானத் திருப்பயணம் இரண்டு நாட்களே இடம் பெற்றிருந்தாலும், அவர் நாட்டிற்கு வந்தது குறித்த உணர்வு வெகு காலத்திற்கு நிலைத்திருக்கும் என்று மால்ட்டா குடியரசுத் தலைவர் ஜார்ஜ் அபேலா கூறினார்.

திருத்தந்தை மால்ட்டாவுக்கான 26 மணி நேரத் திருப்பயணத்தை நிறைவு செய்த விமான நிலைய பிரியாவிடை உரையில் இவ்வாறு கூறினார் மால்ட்டா தலைவர் அபேலா.

இஞ்ஞாயிறு மாலையில் மால்ட்டா சர்வதேச விமான நிலையத்தில் இடம் பெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மேய்ப்பாளர் மட்டுமே தரக்கூடிய எமது நாட்டினருக்குத் தேவையான கொடைகளைத் திருத்தந்தை வழங்கினார் என்றும் தெரிவித்தார்.

மால்ட்டா மக்களில் நம்பிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அன்றாட வாழ்க்கையிலும் எதிர்காலத்தை மிகவும் பாதுகாப்பான விதத்தில் எதிர்கொள்வதற்குத் திடப்படுத்தப்பட்டுள்ளோம் என்றும் அபேலா கூறினார்.

மால்ட்டாவில் குருக்களின் தவறான பாலியல் செயல்களால் பாதிக்கப்பட்ட சிறிய குழு ஒன்றைத் திருத்தந்தை சந்தித்ததற்காக தனது நன்றியைத் தெரிவித்த மால்ட்டா அரசுத்தலைவர், பாதிக்கப்பட்ட இவர்கள் திருத்தந்தையின் வார்த்தைகளால் ஆறுதல் அடைந்தார்கள் மற்றும் பல ஆண்டுகளாக அவர்கள் அனுபவித்து வந்த வேதனைகள் குறைந்திருக்கும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.