அம்பேத்கர் பிறந்த
நாளாகிய ஏப்ரல் 14 அன்று அந்த மாமேதையின் ஒரு சில எண்ணங்களை நமது இன்றைய நல்லெண்ணங்கள்
ஆக்குவோம்.
சமுதாயப் புரட்சிக்கு அதிருப்தி மட்டும் போதாது. நீதியின்
அவசியம், சமுதாய, அரசியல் உரிமைகளின் அவசியம் இவைகளை முற்றிலும் நம்பி ஏற்பதே புரட்சிக்குத்
தேவையான அடித்தளம். கடலில் கலக்கும் நீர்த்துளி தன் தனித் தன்மையை இழப்பது போல் தனி
மனிதன் தான் வாழும் சமுதாயக் கடலில் தன் தனித் தன்மையை இழந்து விடக் கூடாது. ஒவ்வொரு
மனிதனின் வாழ்வும் சுதந்திரமாய் தனித் தன்மையுடன் இயங்க வேண்டும். தனி மனிதன் சமுதாய
முன்னேற்றத்திற்காக மட்டும் பிறக்கவில்லை. தன் தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும்
பிறந்துள்ளான். நன்னெறியும், பொருளாதாரமும் மோதிய போதெல்லாம் பொருளாதாரமே வெற்றி
பெற்றது என மனித வரலாறு காட்டுகிறது. தன்னலம் கொண்ட அதிகார வர்க்கம் கட்டாயப்படுத்தப்பட்ட
போது மட்டுமே தன் உரிமைகளை விட்டுக் கொடுத்துள்ளதே தவிர, தானாகவே முன் வந்து தன் உரிமைகளை
விட்டுக் கொடுத்ததாக வரலாறே இல்லை. சமுதாய அராஜகத்திற்கு முன் அரசியல் அராஜகம் ஒன்றுமே
இல்லை. அரசியல் அராஜகத்தை எதிர்ப்பவனைக் காட்டிலும், சமுதாய அராஜகத்தை எதிர்ப்பவனே மாவீரன். ஒரு
சமுதாயத்தில் பெண்கள் எவ்வளவு முன்னேறியுள்ளனர் என்பதை வைத்தே அந்த சமுதாயத்தின் முன்னேற்றத்தை
நான் தீர்மானிப்பேன். எவ்வளவு நீண்ட காலம் வாழ்ந்தோம் என்பதை விட எவ்வளவு உயர்வுடன்
வாழ்ந்தோம் என்பதே வாழ்வு.