முட்புதர் ஒன்றில்
தேள் ஒன்று மாட்டிக் கொண்டது. வெளியே வர முடியவில்லை. அதைப் பார்த்த ஒரு துறவி அந்தத்
தேளை விடுவிக்க முயன்றார். தேள் அருகில் அவர் கை சென்றதும் தேள் அவரைக் கொட்டியது. முட்புதரும்
அவர் கையைப் பதம் பார்த்தது. இருந்தாலும் அந்தத் துறவி தேளை விடுவிக்க மீண்டும் மீண்டும்
முயன்றார். இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் பொறுமை இழந்தார். அத்துறவியிடம்,
"உமக்குக் கொஞ்சமும் மூளை இல்லையா? அந்தத் தேள்தான் உம்மைக் கொட்டிக் கொண்டே இருக்கிறதே.
ஏன் அதை விடுவிக்க தொடர்ந்து முயற்சி செய்கிறீர்?" என்று கேட்டார். அதற்கு அந்தத் துறவி,
"கொட்டுவது தேளின் குணம். அதை மாற்ற முடியாது. அதற்குப் பயந்து, கஷ்டப்படும் ஒரு ஜீவனைக்
காப்பாற்றும் என் குணத்தை நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?" என்று பதில் கேள்வி கேட்டார். மனிதர்களின்
மிருகக் குணத்திற்குப் பயந்து, நம்மில் உறைந்திருக்கும் தெய்வீகத்தை நாம் மறைக்க வேண்டுமா?
மறக்க வேண்டுமா?