மார்ச் 31 - கணக்கு
வழக்குகளை முடிக்கும் நாள். வாழ்க்கையையும், சிறப்பாக, வாழ்க்கையின் முடிவையும் கணக்கு
வழக்கோடு ஒப்பிட்டு அவ்வப்போது பேசுகிறோம். ஒருவரது கணக்கை கடவுள் முடித்து விட்டார்
என்றும், மனிதன் போட்ட கணக்கு வேறு இறைவன் போட்ட கணக்கு வேறு என்றும் மரணத்தைப் பற்றி
பேசுகிறோம். இந்த மார்ச் 31 கணக்கு வழக்குகளை நேர்மையாய் முடித்துள்ளவர்கள் நிம்மதியாய்த்
தூங்கப் போவார்கள். தப்புக் கணக்குகள் எழுதியவர்கள்... தூக்கமின்றி தவிக்க வேண்டியிருக்கும். வாழ்வின்
இறுதியில் நித்திய தூக்கத்திற்குப் போகிறவர்களும், வாழ்க்கைக் கணக்குகளை ஒழுங்காக முடித்திருந்தால்,
நிம்மதியாக நித்திய உறக்கத்தில் ஆழ முடியும். வாழ்க்கைக் கணக்கு தாறு மாறாக இருந்தால்...
தவிக்க வேண்டியிருக்கும். அந்தத் தவிப்பு சில நேரங்களில் மரணப் படுக்கையிலும் வெளிப்படும்.
ஒரு
குரு என்ற முறையில் ஒரு சிலரது வாழ்வின் இறுதி கட்டத்தில் ஆன்மீக அளவில் உதவிகள் செய்திருக்கிறேன்.
ஒரு முறை 80 வயதைத் தாண்டிய ஒருவருக்கு அப்படி உதவி செய்ய வேண்டிய சூழ்நிலை. நான் அவர்
வீட்டுக்குச் சென்றபோது, அவர் ஏற்கனவே சுயநினைவிழந்திருந்தார். மிகக் கடினப்பட்டு மூச்சு
விட்டுக் கொண்டிருந்தார். நான் அவர் தலை மீது கைவைத்து வேண்டினேன். சிறிது நேரம் கழித்து
அவரது உயிர் பிரிந்தது. அப்போது சூழ இருந்தவர்கள், "நீங்க வந்து கை வைக்கனும்னு காத்திருந்தது
போல இருந்துச்சு..." என்று சொன்னார்கள். அவர் ஏறக்குறைய மூன்று நாட்கள் சுய நினைவை இழந்திருந்தார்,
கடைசி ஒரு நாள் மூச்சு இழுத்துக் கொண்டு இருந்தது என்றெல்லாம் அறிந்தேன். அவரது இறுதி
சடங்குகள் முடிந்து நான் என் அறைக்கு வந்து, அதைப் பற்றி சிந்தித்தேன். இறக்கும் நிலையில்
உள்ளவர்கள் இறுதி நேரத்தில் சந்திக்கும் போராட்டம் பற்றி சிந்தித்தேன். என் இந்த போராட்டம்?
ஒரு வேளை, இறுதி நேரத்தில் எதையாவது சொல்ல நினைத்தார்களோ. அந்த இறுதி மூச்சு போகு முன்
அவர்கள் மனம், சிந்தனை இவைகளில் எந்த விதமான எண்ணங்கள் ஓடும்? யாராலும் கண்டு பிடிக்க
முடியாது. பொதுவாகவே, எதையாவது சொல்ல வந்து விட்டு சூழ்நிலையால் அதைச் சொல்ல முடியாமல்
போகும் போது, அந்த வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக் கொண்டதாகச் சொல்கிறோம் இல்லையா?
அப்படி வார்த்தைகள், எண்ணங்கள் தொண்டைக்குள் அல்லது சிந்தைக்குள் சிக்கிக் கொள்ளும்போது,
அதுவும் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அப்படி சிக்கிக் கொள்ளும்போது, அந்த உயிர் பிரிவதற்கு
போராடுகிறது என்று நாம் எண்ணுகிறோம். இல்லையா? அதற்கு மாறாக, வாழ்வின் எல்லா பிரச்சனைகளையும்
தீர்த்து விட்டவர்கள், எல்லா வகையிலும் ஒரு நிறைவைக் கண்டவர்கள், எந்த வித ஏக்கமும் இல்லாமல்
இறுதி நேரத்தை எதிர் பார்ப்பவர்கள் அமைதியாக உலகை விட்டுப் பிரிவதையும் நான் பார்த்திருக்கிறேன்.
இப்படி
ஒரு நிறைவோடு, அமைதியோடு இயேசு இவ்வுலக வாழ்விலிருந்து விடை பெற்றுச் சென்றார். அவர்
சிலுவையில் சொன்ன இறுதிச் சொற்கள்: "எல்லாம் நிறைவேறிற்று." (யோவான் 19: 30) என்பதும்,
"தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்." (லூக்கா 23: 46) என்பதும். ஆனால், இந்த
அமைதியான, நிறைவான முடிவுக்கு வருவதற்கு முன் சிலுவையில் அவரும் போராடினார். யோவான்,
லூக்கா இருவரும் இயேசுவின் இறப்பு இவ்வளவு அமைதியாக இருந்ததென்று குறிப்பிடும் போது,
மத்தேயு, மாற்கு இருவரும் “இயேசு உரக்கக் கத்தி உயிர் நீத்தார்” என்று கூறியுள்ளனர்.
(மத். 27: 50 மாற். 15: 37 ) இயேசு இறுதியாகச் சிலுவையில் சொன்னதாக இவர்கள் இருவரும்
குறிப்பது போராட்டத்தின் உச்சியில் ஓர் உள்ளம் கதறிச் சொல்லும் வார்த்தைகள்: "எலோயி,
எலோயி, லெமா சபக்தானி?... என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" (மத். 27:
46 மாற். 15: 34) நான்கு நற்செய்திகளையும் ஒரு சேரப் பார்க்கும் போது, முழுமையான
ஒரு காட்சி நமக்குக் கிடைக்கிறது. இயேசுவும் தன் இறுதி கணக்கை முடிக்கும் போது, தடுமாறினார்,
போராடினார், தந்தையை நோக்கி "ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று கதறினார். ஆனால், இறுதி
நேரத்தில் தன் பணி முழுமை பெற்றது, தன் கணக்கு சரிவர முடிந்தது என்ற திருப்தியுடன் அவர்
விடை பெற்றார். சாகும் நேரத்தில் இப்படி ஒரு அமைதியை, நிறைவை அடைவதற்கு பல நிலைகளைக்
கடந்து வர வேண்டும். புற்று நோய் முற்றிய நிலையில், தங்கள் இறுதி நாட்களை, மணி நேரங்களை
எண்ணிக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு மனநல ரீதியில் பல ஆண்டுகள் பணியாற்றிய Elizabeth
Kubler Ross என்ற மனநல மருத்துவர் 1969ல் எழுதிய "On Death and Dying" என்ற புத்தகம்
40 ஆண்டுகள் கழிந்து, இன்றும் பலராலும் போற்றப்படுகிறது. மரணத்திற்காக காத்திருக்கும்
இவர்களை Terminally Ill Patients அதாவது வாழ்வின் இறுதிநிலையில் இருக்கும் நோயாளிகள்
என்று சொல்கிறோம். இந்நிலையில் உள்ள பல நூறு நோயாளிகளைச் சந்தித்து, மரணத்தை எதிர்கொள்ள
அவர்கள் நிகழ்த்தும் போராட்டங்களை அறிந்து, அவர்களுக்குப் பல ஆண்டுகள் உதவிய பின், Elizabeth
தன் அனுபவங்களைத் தொகுத்து எழுதிய புத்தகம் இது. மரணம் நிச்சயம் என்பது தெரிந்த அந்த
நேரத்திலிருந்து இந்த நோயாளிகள் மேற்கொள்ளும் இறுதி பயணத்தை அவர் ஐந்து நிலைகளில் விளக்கியுள்ளார்.
அந்த ஐந்து நிலைகள் நம் சிந்தனைகளுக்கு உதவும்.
புற்று நோய் தன் மரணத்திற்கு நாள்
குறித்து விட்டது என்பதை உணர்ந்தவர்கள் முதலில் மறுப்பு நிலையில் இருப்பதாக Elizabeth
கூறுகிறார். “No, this can't be... not me... இப்படி இருக்காது, நடக்காது, அதுவும் எனக்கு
இப்படி நடக்காது” என்றெல்லாம் இவர்கள் அந்த செய்தியை ஏற்க மறுப்பார்கள். இரண்டாம்
நிலையில்கோபம் எழும். “ஏன் எனக்கு? நான் என்ன செய்தேன்? இது அநியாயம்.” என்று
கோபப்படுவார்கள். மூன்றாம் நிலையில் பேரம் பேசுவார்கள். கடவுளோடு, வாழ்க்கையோடு
பேரங்கள் நடக்கும். “என் மகள் கல்யாணம் வரைக்கும் என்னை வாழ்வைத்துவிடு... எனக்கு குணமானால்,
உன்னுடைய கோவிலுக்கு நடந்தே வருகிறேன். எனக்கு குணமானால், எக்காரணத்தைக் கொண்டும் மது
அருந்த மாட்டேன். என் சொத்தெல்லாம் எடுத்துக் கொள். எனக்கு நலம் தா”... என்பன போன்ற பேரங்கள். நான்காம்
நிலை - ஆழ்ந்த வருத்தத்தில் மூழ்குதல். எதிலும் பற்றற்ற, எல்லாரையும், எல்லாவற்றையும்
விட்டு விட்டு ஒதுங்கும் நிலை. ஐந்தாம் நிலை - தன் சாவை, முடிவை ஏற்கும்
நிலை. “சாவு நிச்சயம் என்பது தெரிந்து விட்டது. அதை எப்படி சந்திப்பது எனக் கற்றுக்
கொள்ள ஆசைப்படுகிறேன்.” என்று சொல்லும் அளவுக்குப் பக்குவம் பெறுவது.
எல்லா நோயாளிகளும்,
எல்லா நிலைகளையும் வரிசையாகக் கடக்க வேண்டும் என்றில்லை. ஒரு சிலர் ஒன்றிரண்டு நிலைகளிலேயே
இறந்து போகும் வாய்ப்புண்டு. ஒரு சிலர் முதல் நிலைக்குப் பின் ஐந்தாம் நிலைக்கு நேரடியாகச்
செல்லும் பக்குவமும் பெறுகிறார்கள். எல்லாரும் இறுதி நிலையை அடைகிறார்கள் என்றும் சொல்லமுடியாது...
இது போன்ற கருத்துக்களை Elizabeth தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Elizabeth
கூறியுள்ள இந்த ஐந்து நிலைகள் முதலில் மரணத்தை எதிர்கொள்ளும் நோயாளிகளுக்கு மட்டுமே பயன்பட்டது.
ஆனால், வாழ்வின் பல்வேறு இழப்புகளிலும் இந்த நிலைகளை ஒவ்வொருவரும் உணர்கிறோம் என்று Elizabeth
கூறியுள்ளார். நமக்கு நெருங்கிய ஒருவர் இறக்கும் போது அந்த இழப்பை முதலில் ஏற்க மறுக்கிறோம்,
பின்னர் கோபப்படுகிறோம்... இப்படி அந்த இழப்பை ஏற்றுக் கொள்வதற்கு முன் வெவ்வேறு நிலைகளை
கடக்க வேண்டியுள்ளது. இதேபோலவே, நம் வேலையை இழக்கும் போது, நமக்கு ஏற்படும் பொருள் இழப்பு
அல்லது நம் நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் பிரிவது... என்று எல்லா இழப்புகளிலும் இந்த
நிலைகளை நாம் உணர முடியும். எனவேதான், Elizabeth எழுதிய இந்த புத்தகம் இன்னும் பலருக்கு
பல இழப்புகளில் உதவியாக உள்ளது.
இயேசு சிலுவையில் அத்தனை போராட்டங்களையும் தாண்டி
5ஆம் நிலையை அடைந்து தன் உயிரை நம்பிக்கையோடு இறைவனிடம் ஒப்படைத்தார். அவர் விண்ணகம்
சென்றதை நான் இப்படி கற்பனை செய்து பார்க்கிறேன். வீட்டைத் திறந்து வைத்து, வாசலில் வந்து
வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும் ஒரு தாயை, தந்தையைச் சந்தித்து அவர்கள் அணைப்பில்
தன்னையே முழுவதும் கரைத்துக் கொள்ளும் குழந்தையைப் போல் இயேசு தன் வானக வீட்டை அடைந்தார்.
"தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" என்று வாயார, மனதார சொல்லி உயிர் நீத்தார். வாழ்க்கையில்
சந்திக்கும் பல இழப்புகளின் போது அவைகளை சரியான வகையில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெறவும்,
நமது இறுதி நேரம் வரும் போது நிறைவாக, அமைதியாக இவ்வுலகை விட்டு விடைபெற்றுச் செல்லும்
விதமாக நம் வாழ்க்கை அமையவும் சிலுவையில் அமைதியாய் உலகினின்று விடைபெற்ற இயேசு நமக்கு
இந்த புனித வாரத்தில் பாடங்களைச் சொல்லித்தர வேண்டுவோம்.