மார்ச்25,2010 இன்றைய சமுதாயம் நலமுடன் திகழ குடும்பங்கள் ஒரு மையமான, முக்கியமான பங்கு
வகிக்க வேண்டும் என்று திருத்தந்தை 16 ஆம் பெனெடிக்ட் கூறினார். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
திருத்தந்தையுடனான Ad Limina சந்திப்பிற்கு Scandinaviaவிலிருந்து ரோமைக்கு வந்திருக்கும்
ஆயர்களிடம் உரையாற்றுகையில் திருத்தந்தை இவ்வாறு கூறினார். குடும்பங்களுக்கான மாநாடு
இவ்வாண்டு மே மாதம் Scandinaviaவில் நடைபெறுவதை மகிழ்வுடன் தான் வரவேற்பதாகக் கூறிய திருத்தந்தை,
அண்மைக் காலங்களில் திருமணம், குடும்பம் ஆகிய அம்சங்கள் ஐரோப்பிய சமூகத்தில் அடைந்துள்ள
பாதிப்புகளையும் எடுத்துக் கூறினார். Nordic பகுதியில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை அதிகமில்லை
எனினும், அங்குள்ள பிற மதத்தினரும் கத்தோலிக்கத் திருச்சபை சொல்லும் கருத்துக்களைக் கவனமாகக்
கேட்டு வருவதை அறியமுடிகிறது என்று இவ்வாயர்களிடம் திருத்தந்தை கூறினார். பங்குத்
தளங்களில் இளையோருக்கென பணிகளை இன்னும் தீவிரமாகச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய
திருத்தந்தை, அண்மையில் உலகம் சந்தித்த பொருளாதாரப் பின்னடைவால் பாதிக்கப்பட்டோருக்குத்
தனி கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.பரந்து விரிந்த Nordic பகுதியில்
தனிமையில் அருட்பணியாளர்கள் இருக்கும் சூழல்களைப் புரிந்து கொண்டு, அருட்பணியாளர்களுக்கென
அற்பணிக்கப்பட்டுள்ள இந்த ஆண்டில் குருக்களைப் பேணி காக்கும்படி Scandinavia ஆயர்களைக்
கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.