திருத்தந்தை செப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்குவருவார் என்று இங்கிலாந்து
அரசி அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்
மார்ச்17,2010 திருத்தந்தை வருகிற செப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு வருவார் என்று இச்செவ்வாயன்று
இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். இங்கிலாந்தின்
ஐக்கிய அரசும், திருப்பீடமும் இணைந்து செயல்படும் போது, உலகத்தில் விசுவாசத்தின் அடிப்படையில்
உறுதி வாய்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று இங்கிலாந்தின் அரசு அதிகாரிகளும் இங்கிலாந்து,
ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆயர் பேரவையினரும் இணைந்து செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். திருத்தந்தையின்
இந்த பயணம் வரலாற்று சிறப்பு மிக்கது, ஏனெனில் திருத்தந்தை ஒருவர் அரசு சார்பில் அந்நாட்டிற்கு
பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்றும் மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 1982ல்
அங்கு மேற்கொண்ட பயணம் மீட்புப் பணி சார்ந்த பயணமே என்றும் அரசு தரப்பில் வெளியான ஒரு
செய்திக் குறிப்பு கூறுகிறது. திருத்தந்தையின் வருகை கத்தோலிக்க மக்களுக்கு மட்டுமல்ல,
இங்கிலாந்தின் அனைத்து மக்களுக்கும் மகிழ்வு தரும் ஒரு நிகழ்வு என்றும் இங்கிலாந்தும்
திருப்பீடமும் உலகத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு, முக்கியமாக வறுமை, சுற்றுச்சூழல் குறித்த
பல்வேறு பிரச்சனைகளுக்கு இணைந்து தீர்வுகள் காண திருத்தந்தையின் வருகை வழி வகுக்கும்
என்றும் ஸ்காட்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் Jim Murphy கூறினார். அரசுத்தரப்பில் இந்த
வரலாற்று சிறப்பு மிக்க அழைப்பை விடுத்த அரசி எலிசபெத்துக்கும், இங்கிலாந்து அரசுக்கும்
ஆயர் பேரவையின் சார்பில் தன் மகிழ்வையும் நன்றியையும் தெரிவித்தார் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Vincent Nichols.