மார்ச்15,2010. தன் அன்பின் மிகுதியால் நம்மைச் சுதந்திரமுடையவர்களாகப் படைத்து, நமக்கு
மனச்சான்றையும் வழங்கிய இறைவன், நாம் தவறிப் போகும்போது மனம் வருந்துவதுடன், திரும்பி
வரும்போது அது குறித்து மகிழவும் செய்கிறார் என்றார் பாப்பிறை 16ம் பெனெடிக்ட். இஞ்ஞாயிறு வாசகமான ஊதாரி
மைந்தன் உவமை குறித்து ஞாயிறு மூவேளை ஜெப உரை வழங்கிய திருத்தந்தை, நாம் இறைவனுக்கு எதிராகச்
சென்றாலும், அவரிடம் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டாலும், நம்மைத் தொடர்ந்து அன்பு செய்யும் கருணையின்
தந்தையாக இறைவன் உள்ளார் என்றார். இறைவன் இரக்கம் நிறைந்தவராக இல்லையெனில், நம் கலாச்சாரம்,
கலை மற்றும் நாகரீகம் எப்படி இருந்திருக்கும் என்ற கேள்வியையும் தன் மூவேளை ஜெப உரையின்
போது விசுவாசிகளுக்கு முன் வைத்தார் பாப்பிறை. நம்பிக்கைக்கு உரியவராக இருக்கும் கடவுள், நாம்
அவரை விட்டு விலகிச் சென்றாலும், தன் அன்பால் நம்மைப் பின் தொடர்ந்து, நம் குற்றங்களை
மன்னித்து, நாம் திரும்பி வரும்படி நம் மனசான்றிற்கு அழைப்பு விடுக்கிறார் என்ற பாப்பிறை,
ஊதாரி மைந்தனின் உவமையில் காணப்படும் இரு மைந்தர்களும் இறைவனுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்கள் மற்றும்
சிறுபிள்ளைத்தனமாக கீழ்ப்படிய மறுப்பவர்களுக்கு உதாரணமாக உள்ளார்கள் எனக் கூறினார்.இறைத்
தந்தையின் இதயம் குறித்து தியானிக்கும் நாம் அவரின் கருணை நிறை அன்பால் புது வாழ்வு பெறும் பொருட்டு அவர் கரங்களில் நம்மை ஒப்படைப்போம் என
திருத்தந்தை மேலும் உரைத்தார்.