தவக்காலச் சிந்தனை – வழங்குபவர் அருட்பணி பவுல்ராஜ், சே.ச. தூய லூயிஸ் தி மோன்போர்ட்
அவர்கள் இயேசுவின் சிலுவையைப் பற்றிக் குறிப்பிடும் போது, "எவராவது இயேசு கிறிஸ்துவின்
சிலுவையை நினைத்து வெட்கப்படுவார்களேயானால், இயேசுவும் தனது தந்தையின் முன்பாக அவர்களை
நினைத்து மிகவே வெட்கப்படுவார்." என்கிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தனது
சிலுவைச் சாவையும், மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவதையும் முன்னறிவிக்கிறார். இயேசுவின்
சிலுவைச் சாவு நமக்குக் கற்பிப்பது தான் என்ன?
இயேசுவின் சீடர்கள்
ஒவ்வொருவரும் பாடுகள், துன்பங்கள் வழியாகவே மகிமை அடைய முடியும். தங்கள் சிலுவைகளை
நாள் தோறும் விருப்புடன் சுமந்து செல்வது சீடத்துவத்தின் அடையாளம். சீடர்கள் சிலுவையின்
வழியாகவே மீட்பைக் கண்டடைய முடியும். சிலுவையில்லையேல், உயிர்ப்பும் இல்லை.
எனவே,
உயிர்ப்பின் மக்களாக செபதேயுவின் மக்கள் மாறியது போல நாமும் மாற வேண்டுமென்றால், நம்
வாழ்வில் சந்திக்கும் சிலுவைகளை அவர்களைப் போல மனமுவந்து ஏற்று வாழ்வது நமக்கு இன்றியமையாதது.
தொண்டு ஏற்பதற்கு அல்ல; மாறாக, தொண்டாற்றுவதற்கே எனும் உணர்வுடன் முழு அகச் சுதந்திரத்தோடு
இயேசுவின் சீடர்களாகிய நாமும் நமது சிலுவைகளைச் சுமந்து கொண்டு இயேசுவைப் பின் தொடர்வது
நமக்கு அவரது உயிர்ப்பின் மகிமையிலும் பங்கு தரும் என்பதில் நமக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.