2010-02-24 14:35:47

மக்கள் இறைவனோடு ஒப்புரவாகுவதற்கு திருத்தந்தை அழைப்பு


பிப்.24,2010 கடவுளிடம் ஒப்புரவாகுங்கள் என்ற விண்ணப்பம், இறைவார்த்தையை அறிவிக்கும் ஒவ்வொரு திருப்பணியாளர் உதடுகளிலிருந்தும் இத்தவக்காலத்தில் வெளிப்பட வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
சர்வதேச குருக்கள் ஆண்டை அறிவிக்கும் கடிதத்தில் இவ்வாறு தான் குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ள திருத்தந்தை, இறைவனின் அளவற்ற இரக்கப் பெருக்கத்தை எடுத்துச் சொல்ல வேண்டியது அருட்பணியாளர்களின் கடமையாகவும் இருக்கின்றது என்று கூறினார்.
இத்தவக்காலத்தில் பிரேசிலில் இடம் பெற்றுவரும் கிறிஸ்தவ சகோதரத்துவ நடவடிக்கையை முன்னிட்டு அந்நாட்டு ஆயர்களுக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.
மக்கள் இறைவனோடு ஒப்புரவாவதற்கும், பணத்தின் அடிமைத்தனத்தினின்று அவர்கள் விடுதலை பெறுவதற்கும் அந்நாட்டின் கிறிஸ்தவ சமூகங்கள் எடுத்துவரும் முயற்சிகளைத் தான் ஊக்கப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.பணத்திற்கு அடிமையாவதும் அதற்கு அநீதியாக நடந்து கொள்வதும் தீமையில் வாழ்வதன் அடையாளங்கள் என்றுரைத்த திருத்தந்தை, மக்கள் மனம் மாறி கடவுளிடம் ஒப்புரவாவதற்கு அச்செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.