2010-02-20 14:48:59

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
ஒவ்வொரு ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறு இயேசு சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்க திருச்சபை நம்மை அழைக்கிறது. தவக்காலம் ஒரு வசந்த காலம், புத்துயிர் தரும் காலம், நம்மைப் புதுப்பிக்கும் காலம் என்று தவக்காலத்தைப் பற்றி கொஞ்சம் வித்தியாசமாக சென்ற விவிலியத் தேடலில் சிந்தித்தோம். இன்று சோதனைகளைப் பற்றியும் கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்க முயற்சி செய்வோம்.
சோதனை என்ற வார்த்தையைக் கேட்டதும், ஓடிவிடவேண்டும் போல் எனக்குத் தோன்றும். அவ்வளவு பயம். சோதனை ஒரு எதிரிபோலவும், என்னைத் தாக்குவதற்காக எப்போதும் காத்திருக்கும் ஒரு மிருகம் போலவும் என் கற்பனையில் பல உருவங்கள் உலா வருவதால் இந்த பயம். ஆர அமர சிந்தித்தால், சோதனைகள் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத ஒரு முக்கிய அம்சம் என்பது முதலில் நாம் உணர வேண்டிய உண்மை என விளங்கும். சோதனைகள் இல்லாத மனித வாழ்வு இல்லை. இயேசுவே சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இயேசு சோதனைகளைச் சந்தித்ததும், அவற்றை அவர் வென்றதும் நமக்கு நல்ல பாடங்கள்.
 சென்ற ஆண்டு தவக்காலத்தின் இந்த முதல் ஞாயிறுக்கான மறையுரை பற்றி இன்னொரு குருவோடு நான் பேசிக் கொண்டிருந்தேன். சோதனை என்ற வார்த்தையை நான் சொன்னதும், அவர் ஒரு பழைய  திரைப்பட பாடலைப் பாட ஆரம்பித்தார். "சோதனை மேல் சோதனை. போதுமடா சாமி." என்ற பாடல். இந்தப் பாடலைப் பாடும் படத்தின் நாயகனின் வாழ்க்கையில் பல பிரச்சனைகள், தீர்க்க முடியாதது போல் தோன்றும் பிரச்சனைகள். எனவே, விரக்தியில், சோகத்தில் இந்தப் பாடல் பாடப்படும்.
சில சமயங்களில் திரைப்படங்களில் காட்டப்படும் சூழ்நிலைகளைத் தாண்டி சில திரைப்பட பாடல்களை நாம் அடிக்கடி கேட்டு வருவதால், அந்தப் பாடல்கள் கூறும் சொற்கள் நம் நினிவுகளில் ஆழமாய் பதிந்து விடும். இந்தத் திரைப்படத்தைப் பார்க்காதவர்களும் இந்தப் பாடலைப் பாடியிருப்பார்கள், ஒரு வேளை என் நண்பரைப் போல் சில சூழ்நிலைகளில் இந்தப் பாடலைப் பயன்படுத்தியிருப்பார்கள். சோகத்தில் தோய்த்தெடுக்கப்பட்ட இந்தப் பாடலைப் பாடும் போது, எதுவுமே செய்யமுடியாத ஓர் இயலாத் தன்மை மனதை ஆக்ரமிக்கும்.

நம்மை மீறிய ஒரு சக்தியில் நாம் மாட்டிக்கொண்டோம் எனவே நம்மால் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை என்பன போன்ற எண்ணங்களை, உணர்வுகளை பல சமயங்களில் நாம் உணர்ந்திருக்கிறோம். தலைவிதி, தலை எழுத்து என்ற எண்ணங்களில் ஊறிப் போயிருக்கும் இந்திய மனங்கள் சோதனைகளைப் பார்க்கும் கண்ணோட்டம் என்ன?
நம்மால் சமாளிக்க முடியாத ஒரு பெரும் படையைச் சந்திப்பது போலவும், தப்பித்துக் கொள்ள முடியாத அளவு பெருகியுள்ள ஒரு காட்டாற்று வெள்ளத்தில் நாம் அடித்துச் செல்லப்படுவது போலவும் நம்மில் பலர் சோதனைகளைப் பார்க்கிறோம். இப்படி சோதனைகளைப் பற்றிய எண்ணங்களை நாம் வளர்த்துக் கொள்வதால், சோதனைகளுக்கு ஒரு அபூர்வ சக்தியை நாம் தருகிறோம். இது ஒரு ஆபத்தான எண்ணம்.
சோதனைகள் சக்தி வாய்ந்தவைதான். நம் ஆழ் மனதில் உள்ள தீய நாட்டங்கள், மிருக உணர்வுகள் இவைகளைத் தட்டி எழுப்பும் சோதனைகள் சக்தி மிகுந்தவைதான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அவற்றை எதிர்த்து நிற்கவும், அவைகளோடு போராடி வெற்றி பெறவும் நம்முள் நல்ல எண்ணங்களும், உறுதியான மனமும் உள்ளன. இதை நாம் நம்ப வேண்டும்.
நமது சொந்த சக்திக்கு  மீறியதாய்த் தோன்றும் சோதனைகள் வரும்போது, இறைவனின் சக்தி நமக்குத் துணை வரும் என்ற நம்பிக்கையும் நம்மில் வளர வேண்டும். சின்ன வயதில் நமக்குச் சொல்லித் தந்த 'காவல் சம்மனசு' கதைகள் வெறும் கற்பனைக் கதைகளா? கட்டுக் கதைகளா? அல்லது நம்மைக் காப்பதற்கு இறைவன் எப்போதும் நம்முள் இருக்கிறார் என்பதை நினைவுபடுத்தும் அடையாளங்களா?
சோதனைகளுக்கு, அவற்றின் மூல காரணமான தீய சக்திகளுக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதால் உள்ளத்தில் நம் உறுதி, நம்பிக்கை இவை குலைகிறதே... அதுதான் இன்று உலகத்தில் பலர் சந்திக்கும் மாபெரும் ஒரு சோதனை.

நாம் வாழும் உலகில் நல்லவைகளும், ஆக்கப்பூர்வமான செயல்களும் நடக்கின்றன. தீயவைகளும், அழிவுகளும் நடக்கின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நமது செய்தித் தாள்கள், தொலைகாட்சி, வானொலி என்று அனைத்து தொடர்புச் சாதனங்களும் பெருமளவில் அழிவையே நமக்குப் படங்களாக, கதைகளாகச் சொல்லி நம் மனதை உருக்குலைய வைக்கின்றன. வசூலுக்குச் சுவையானவை இந்தக் கோரங்கள்! ஆனால், வாழ்க்கையில் இவை உண்டாக்குவது விபரீதங்கள். இவைகளையே தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தவறாமல் பார்க்கும் போது, "ச்சே, என்னடா உலகம்" என்ற எண்ணம் ஆழமாகப் பதிகிறது. இதே எண்ணத்தை உறுதிப்படுத்தும் திரைப்படப் பாடல்கள், அதுவும் அடிக்கடி கேட்கப்படும் பாடல் வரிகள் ஆழ் மனதில் இடம் பிடித்து விடுகின்றன. "சோதனை மேல் சோதனை... போதுமடா சாமி." என்று சொல்ல வைத்து விடுகின்றன.
இப்படி ஓர் இயலாத் தன்மை நமக்கு ஊட்டப்படும் போது, இந்த உலகத்தின் அழிவு சக்திகளுக்கு முன் நாம் வெறும் பார்வையாளர்கள் தான்... நம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற ஒரு பிரமை, ஒரு மாயை நம்மில் வளர்வது பெரும் சோதனை. இந்தச் சோதனையை முதலில் நாம் வெல்ல வேண்டும்.
இயேசு சோதனைகளைச் சந்தித்தது, அவைகளை வென்றது நமக்கு நல்லதொரு பாடமாக இருக்கும். நற்செய்தியில் இந்த நிகழ்வைப் பற்றி கேட்போம்.

லூக்கா நற்செய்தி 4 1-13

சிறு வயதில் இயேசுவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பல நாடகங்களைப் பார்த்திருக்கேன். அந்த நாடகங்களில் எல்லாம் அவர் சோதிக்கப்பட்ட காட்சி கட்டாயம் இருக்கும். அந்தக் காட்சிகளில் சாத்தான் கருப்பு உடையுடன், முகமெல்லாம் கரி பூசி, தலையில் இரு கொம்புகள் வைத்து, பயங்கரமாய் சிரித்துக் கொண்டு வரும். பல முறை நான் அந்தக் காட்சியைப் பார்த்து பயந்திருக்கிறேன். இவ்வளவு பயங்கரமாய் சாத்தான் வந்தால், அதை விட்டு ஓடிவிடுவோம், அல்லது அதை விரட்டி அடிப்போம். ஆனால், வாழ்வில் நாம் சந்தித்துள்ள, இனியும் சந்திக்க இருக்கும் சாத்தான்களும், அவை கொண்டு வரும் சோதனைகளும் பயத்தில் நம்மை விரட்டுவதற்கு பதில், ஆர்வமாய் நம்மை கவருகின்றன என்பதுதான் உண்மை. சோதனைகள், சாத்தான்கள் அவ்வளவு அழகானவை.
இன்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள மூன்று சோதனைகளும் நல்ல சோதனைகள். கொலை, கொள்ளை, ஏமாற்றுதல் என்று தவறான செயல்களைச் செய்யச் சொல்லி சாத்தான் இயேசுவைத் தூண்டவில்லை.

இயேசு சந்தித்த முதல் சோதனை என்ன? பசியாய் இருந்த இயேசுவிடம் கல்லை அப்பமாய் மாற்றச் சொன்னது அலகை. இயேசுவிடம் இருந்த சக்தியைப் பயன்படுத்தி அவரது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளத் தூண்டியது சாத்தான். நேரம் அறிந்து, தேவை உணர்ந்து வந்த ஒரு சோதனை. தேவைகள் அதிகமாகும் போதுதானே, அவற்றை எப்படியாகிலும் நிறைவேற்றும் சோதனைகளும் கூடவே வரும்?
சாத்தான் சோதனையை ஆரம்பித்த விதமே அழகான வரிகள். "நீர் இறைமகன் என்றால், இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்." சிறுவர்கள் விளையாடும் போது, இது போன்ற சவால்கள் எழும். "நீ வீரனாய் இருந்தால்... இந்தப் பூச்சியைப் பிடிச்சிடு, அந்த மரத்துல ஏறிடு..." போன்ற சவால்கள். சவால்களைச் சந்திக்காவிட்டால், அந்தச் சிறுவன் வீரன் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டு விடும். இதற்கு பயந்து வீர சாகசங்கள் செய்து அடிபட்டுத் திரும்பும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறோம்.
இயேசுவிடம் இப்படி ஒரு சவாலை முன் வைக்கிறது சாத்தான். "நீர் இறை மகன் என்றால்..." என்று சொல்லும்போது, இறைமகன் எப்படிப்பட்டவராய் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது சாத்தான். இறைமகனுக்கு சாத்தான் இலக்கணம் எழுதுகிறது. இறைமகன் என்பதை நிரூபிக்க, நிலை நாட்ட, புதுமைகள் நிகழ்த்த வேண்டும், அதுவும் தன்னுடைய சுய நலத் தேவையை நிறைவு செய்யும் வண்ணம் புதுமை செய்ய வேண்டும்.
தன் சக்தியை நிலை நாட்ட புதுமைகள் செய்பவர்கள் வித்தைகள் காட்டும் மந்திரவாதிகளாய் இருக்க முடியுமே தவிர, இறைவனாகவோ, இறைமகனாகவோ இருக்க முடியாது. தன் சுய நலனுக்கு, சுய தேவைக்குப் புதுமைகள் செய்வது புதுமைகள் செய்யும் சக்தியை அழுக்காக்கும், அர்த்தமில்லாததாய் ஆக்கும்.
 இயேசு சாத்தானுக்குச் சொன்ன பதிலும் அழகானது. இயேசு தன் உடல் பசியை விட, ஆன்ம பசி தீர்க்கும் உணவைப் பற்றி பேசினார். “மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை” என்ற இணைச் சட்ட நூலில் மோசே சொன்ன வார்த்தைகளைக் கூறுகிறார். (இணை. 8:3)
தன் சொந்த பசியைத் தீர்த்துக் கொள்ள மறுத்த இயேசு, பல்லாயிரம் பேரின் பசியைத் தீர்க்க தன் சக்தியைப் பயன்படுத்தினார் என்பது நமக்குத் தெரியும். நமக்கு இறைவன் கொடுத்துள்ள சக்திகள் திறமைகள் எதற்கு? சுய தேவைகளை நிறைவு செய்வதற்காகவா? சிந்திக்கலாம், இயேசுவிடம் பாடம் கற்றுக் கொள்ளலாம்.

இயேசு சந்தித்த இரண்டாவது சோதனை என்ன? உலகமனைத்தையும் இயேசுவிடம் ஒப்படைக்க விரும்புவதாக அலகை சொல்கிறது. உலகத்தைத் தன் வசமாக்கத்தானே இயேசு மனு உருவானார்? இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது, ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே! அப்படி இயேசு உலகை  தன் மயமாக்க வேண்டுமானால், அவர் ஒரு 'அட்ஜஸ்ட்மென்ட்' செய்ய வேண்டும். சாத்தானோடு சமரசம்... இல்லை, இல்லை, சாத்தானிடம் சரணடைய வேண்டும். இயேசு அதை திட்ட வட்டமாக மறுத்தார். சாத்தான் முன் சரணடைய மறுத்த இயேசு, சிலுவையில் தொங்கியபோது,  "தந்தையே, உமது கைகளில் என் ஆன்மாவை ஒப்படைக்கிறேன்" என்று இறைவனிடம் சரணடைந்தார்... உலகைத் தன் வசமாக்கினார்.
தவறான வழிகள், தவறான சக்திகளுடன் எத்தனை முறை சமரசம் செய்திருக்கிறோம்? எத்தனை முறை இவைகள் முன் சரணடைந்திருக்கிறோம்? நல்லது ஒன்று நடக்க வேண்டுமென்று தீமைகளைச் சகித்துக் கொள்வதும், தீமைகள் நடக்கும் போது கண்களை மூடிக் கொள்வதும்... இப்படி நடப்பதற்கு காரணம், ஊரோடு ஒத்து வாழ்தல் என்று உபதேசம் செய்வதும்... நாம் வாழ்க்கையில் அடிக்கடி, பார்த்து, பழகி வந்துள்ள எதார்த்தங்கள். இப்படி சமரசம் செய்வதே நம் வாழ்க்கையாகி விட்டதா என்று சிந்திப்பது நல்லது.

மூன்றாவது சோதனை? இறைமகன் உலகை வெல்வதற்கு, உலகை மீட்பதற்கு எந்தத் தொந்தரவும், துன்பமும் இல்லாத குறுக்கு வழியொன்றை அலகைக் காட்டுகிறது. எருசலேம் தேவாலயத்தின் மேலிருந்து இயேசு குதிக்க வேண்டும். உடனே, வானங்கள் திறந்து, விண்ணவர் ஆயிரமாய் இறங்கி வந்து, இயேசுவின் பாதம் தரையை தொடாமல் அவரைத் தாங்கிய வண்ணம் தரைக்குக் கொண்டு வருவார்கள். உலக முடிவில் அவர் மாட்சியுடன் வருவதற்கு ஒரு ஒத்திகைபோல இது அமையும். எருசலேம் முழுவதும், ஏன் உலகம் முழுவதும் இயேசுவின் சீடர்களாகிவிடுவர்.
30 ஆண்டுகள் மறைந்த வாழ்வு, 3 ஆண்டுகள் கடினமான பணி, இறுதி 3 நாட்கள் படும் வேதனை, இறுதி 3 மணி நேரங்கள் சிலுவையின் கொடூரச் சித்ரவதை... இவை எதுவும் தேவையில்லை. ஒரு நொடிப் பொழுது போதும். ஒரு எருசலேம் தேவாலய சாகசம் போதும். உலகம் இயேசுவின் காலடியில் கிடக்கும். விளையாடியது போதும் என்று இயேசு சாத்தானைக் கடினமாக விரட்டி அடிக்கிறார்.

மூன்றாவது சோதனையில் ஒரு கூடுதல் சிந்தனை உண்டு. சென்ற இரு சோதனைகளிலும் சாத்தான் வெறும் ஆலோசனைகள் சொல்ல, சாத்தானின் வாயடைக்க இயேசு இறை வாக்குகளைப் பயன்படுத்துகிறார். மூன்றாவது சோதனையில் அலகை இறை வார்த்தையைப் பயன்படுத்தி ஆலோசனை வழங்குகிறது. சாத்தானுக்கு வேதம், விவிலியம் தெரிந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. "Even the devil can quote the Bible" என்ற பழமொழி உண்டு.
 வேதங்கள், வேத நூல்கள் உட்பட நல்லவைகள் பலவும் பொல்லாத இடங்களில், பொல்லாத காரணங்களுக்குப் பயன்படுத்தப்படுவது வேதனைக்குரிய ஒரு உண்மை. உண்மை, நீதி இவை அடிக்கடி விலை பேசப்படும் நமது நீதி மன்றங்களில் விவிலியத்தின் மீது அல்லது பிற வேத நூல்களின் மீது சத்தியப் பிரமாணங்கள் கொடுக்கப்படுகின்றன. வேதனை மேல் வேதனை... போதுமடா சாமி.
 'Tis one thing to be tempted, another thing to fall' (William Shakespeare, Measure for Measure Act II, Sc.1) சோதிக்கப்படுவது வேறு, சோதனையில் விழுவது வேறு. ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் வரும் வரிகள். இயேசு சோதிக்கப்பட்டார். ஆனால், சோதனையில் விழவில்லை. நாமும் சோதனைகளை சந்திக்கும் போது, அந்த இறைமகன் சொல்லித் தந்த அற்புத செபத்தின் வரிகளை நினைவில் கொள்வோம். "எங்களைச் சோதனையில் விழவிடாதேயும், தீமைகளிலிருந்து எங்களைக் காத்தருளும்."







All the contents on this site are copyrighted ©.