பிப்.17,2010. இப்புதனன்று அகில உலக திருச்சபையில் சிறப்பிக்கப்பட்ட விபூதிப்புதன் குறித்து
தன் மறைபோதகத்தை வழங்கினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
குளிர்காலமெனினும் திருப்பயணிகளின்
கூட்டத்திற்கு குறைவில்லாமல், வத்திக்கானின் திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபம், இருக்கைகள்
காலியில்லாமல் முற்றிலுமாக நிறைந்திருக்க, விபூதிப்புதன் குறித்து திருத்தந்தை பல்வேறு
மொழிகளில் தன் போதனையை அளித்தார்.
இந்நாளில், விபூதிப்புதனானது,
இயேசுவின் உயிர்ப்பை நோக்கிய திருச்சபையின் தவக்காலப் பயணத்தின் துவக்கத்தைக் குறித்து
நிற்கின்றது. புனித பவுல் கூறுவது போல், கடவுளிடமிருந்து பெற்ற அருளை வீணாக்க வேண்டாம்.
அவ்வருளை நாம் ஏற்க, இறைவன் நம்மை நோக்கி ஒறுத்தலுக்கும் ஆன்மீக புதுப்பித்தலுக்கும்
அழைப்பு விடுக்கிறார் என்பதை நமக்கு நினைவுறுத்தி நிற்கின்றது இத்தவக்காலம். மனம்திரும்பலுக்கான
இவ்வழைப்பானது, விபூதிப் புதனன்று தலையில் சாம்பலைத் தடவும் போதான இரு வழிபாட்டு வார்த்தைகளில்
வெளிப்படுத்தப்படுகின்றது. பாவங்களில் இருந்து விலகி நற்செய்திக்கு விசுவாசமாயிருங்கள்
என்ற இம்முதல் வார்த்தையானது, இயேசு தன் பொது வாழ்வின் துவக்கத்தில் விடுத்த அழைப்பை
எதிரொலிப்பதாய் உள்ளது. உண்மையான மகிழ்வு, சுதந்திரம் மற்றும் நிறைவை தன்னால் மட்டுமே
தரவல்ல இயேசு கிறிஸ்துவுடனான உயிருள்ள உறவில் நாம் நுழையும்வண்ணம், நம் பாவ வழிகளை முழுமையாக,
நிரந்தரமாகக் கைவிடுவதே மனம்திரும்பல் என்பதை இவ்வழிபாட்டு வார்த்தை நினைவுறுத்துகின்றது.
“மனிதனே! நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கேத் திரும்புவாய்” என்ற இந்தத் திருவழிபாட்டின்
இரண்டாவது வார்த்தை, ஆதாமின் வழியாய் உள்ளே நுழைந்த பாவம் மற்றும் ஏழ்மையை நம் நினைவுக்குக்
கொணர்வதுடன் இரண்டாம் ஆதாமாகிய இயேசுவின்வழி கொணரப்பட்ட சுதந்திரம், புதுவாழ்வு மற்றும்
உயிர்ப்பு நோக்கிச் சுட்டிக் காட்டுகிறது. செபம் மற்றும் ஒறுத்தல் நடவடிக்கைகள் வழியும்,
அதைவிட மேலாக திருச்சபையின் திருவருட்சாதனங்களை நன்முறையில் வரவேற்று ஏற்பதன் வழியும்
இச்சிறப்புக் காலமானத் தவக்காலத்தின் அருட்கொடைகளின் வழியும் புதுப்பிக்கப்பட்ட மற்றும்
புனிதப்படுத்தப்பட்ட இதயத்துடன் இயேசுவின் உயிர்ப்பை நோக்கிப் பயணம் செல்வோம் என அழைப்புவிடுத்தார்
திருத்தந்தை.
இப்பதன் பொது மறைபோதகத்தின்
இறுதியில் அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.