தென்னாப்ரிக்க அரசியல் தலைவர்களின் முறைகேடான ஒழுக்கநெறி வாழ்வுமுறை எய்ட்ஸ் நோய்க்கெதிரான
முயற்சிகளுக்குத் தடையாக இருக்கின்றது- ஆயர்கள் குறை
பிப்.12,2010 தென்னாப்ரிக்க அரசியல் தலைவர்களின் முறைகேடான ஒழுக்கநெறி வாழ்வுமுறை அந்நாட்டில்
எய்ட்ஸ் நோய்க்கெதிரான முயற்சிகளுக்குத் தடையாக இருக்கின்றது என்று அந்நாட்டு ஆயர்கள்
கவலை தெரிவித்துள்ளனர்.
தென்னாப்ரிக்க அரசுத்தலைவர் ஜாக்கப் ஜூமா (Jacob Zuma),
திருமணத்திற்குப் புறம்பேயான தனது உறவை உறுதி செய்து கடந்த வாரத்தில் அறிக்கை வெளிட்டதையொட்டி,
தென்பகுதி ஆப்ரிக்க ஆயர் பேரவை சார்பில் அறிக்கை வெளியிட்ட டர்பான் (Durban) பேராயர்
கர்தினால் வில்பிரட் நாப்பியெர் (Wilfrid Napier) நாட்டின் அரசியல் தலைவர்களின் நன்னெறி
வாழ்வு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
தென்னாப்ரிக்க அரசியல் தலைவர்களின் பாலியல்
வாழ்வுமுறை, அந்நாட்டின் இளையோருக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்பியுள்ள
கர்தினால் நாப்பியெர், தலைவர்களின் துர்மாதிரிகையான இவ்வாழ்வுமுறை குறித்த ஆயர்களின்
கவலையையும் தெரிவித்துள்ளார்.
பாலியல் ஒழுக்கச்சீர்கேடுகள் மற்றும்பிற தீய செயல்கள்
குறித்து நற்செய்தியில் சொல்லப்பட்டிருப்பது குறித்தும் கர்தினாலின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.