பிப்.02,2010 பிப்ரவரி 2, இயேசுவை
ஆலயத்தில் காணிக்கையாக்கிய விழா. கிறிஸ்து பிறப்பு பெருவிழாவுக்குப் பின்னர் 40ம் நாளில்
இவ்விழா கொண்டாடப்படுகிறது. கிரேக்கத் திருச்சபையில் இவ்விழா, “ஆண்டவரும் அவர்தம் தாயும்
சிமியோனையும் அன்னாவையும் சந்தித்த விழா“ என்வும், “மெழுகுவர்த்தி விழா” எனவும் அழைக்கப்படுகிறது.
அக்காலத்தில் இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டில் பாரவோன் மன்னனிடம் அடிமைகளாய் மிகவும்
அல்லல்பட்டார்கள். அதைக் கண்ட கடவுள் அம் மக்கள் மீது மனமிரங்கினார். அவர்களை அடிமைத்தன
வாழ்விலிருந்து விடுவிக்க மோசேயை அனுப்பினார். பாரவோன் மனமிரங்கவில்லை. எனவே கடவுள் எகிப்திய
மக்களைப் பத்து கொள்ளை நோய்களால் துன்புறச் செய்தார். இறுதியாக அரசன் முதல் அனைத்து மக்களின்
வீடுகளிலும் தலைச்சன் பேறான ஆண்குழந்தைகளைச் சாகும்படிச் செய்தார். அச்சமயம் இஸ்ரயேல்
மக்கள் காப்பாற்றப்பட்டனர். இதற்கு நன்றியாக இஸ்ராயேல் மக்கள் தங்கள் குடும்பத்தில் பிறக்கும்
முதல் ஆண்மகவைக் கடவுளுக்கு காணிக்கையாக்கி வந்தனர். பின்னர் அக்குழந்தையை ஓர் ஆட்டுக்குட்டி
அல்லது ஒரு ஜோடி புறாக்குஞ்சுகளைக் கொடுத்து மீட்டனர். இந்தச் சடங்கு குழந்தை இயேசுவுக்கும்
நடந்தது. இதுவே ஆண்டவரை காணிக்கையாக ஒப்புக் கொடுத்த விழா என்று ஆண்டுதோறும் பிப்ரவரி
இரண்டாம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது. அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் தினமாகவும் இந்நாள்
கடைபிடிக்கப்படுகின்றது. அர்ப்பணம் என்பது மனம் என்னும் மலரிலிருந்து எழுகின்ற நறுமணமாகும்.
ஆம். கிறிஸ்துவை நாம் பற்றிக் கொள்வதால் அல்ல, கிறிஸ்து நம்மைப் பற்றிக் கொள்வதால்
வாழ்வு பெறுகிறோம்.