2010-01-30 15:03:15

தொழுநோயை முற்றிலும் ஒழிப்பதற்கு நாடுகள் புதிய யுக்திகளைக் கையாளுமாறு திருப்பீடம் அழைப்பு


சன.30,2010 தொழுநோயை முற்றிலும் ஒழிப்பதற்கும், புதிதாக இந்நோய்க் கிருமிகளால் மக்கள் பாதிக்கப்படாமலும் இருப்பதற்கும் நாடுகள் புதிய யுக்திகளைக் கையாளுமாறு நலவாழ்வுப் பணிக்கானத் திருப்பீட அவைத் தலைவர் பேராயர் சிக்மண்ட் சிமோவோஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜனவரி 31ம் தேதி இஞ்ஞாயிறன்று கடைபிடிக்கப்படும் உலக தொழுநோயாளர் தினத்தையட்டி செய்தி வெளியிட்ட பேராயர் சிமோவோஸ்கி, இந்த நாளில் இந்நோய் பற்றிச் சிந்திப்பது மட்டுமல்ல, இதனால் தாக்கப்பட்டுள்ளவர்கள் மீது ஒருமைப்பாட்டுணர்வு கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.

உலகில் 2009ம் ஆண்டில் ஏறத்தாழ இரண்டு இலட்சத்து பத்தாயிரம் பேர் தொழுநோயால் புதிதாகத் தாக்கப்பட்டார்கள் என்றும் ஆசியா, தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளில் இந்நோயாளிகள் அதிகமாக உள்ளனர் என்றும் உலக நலவாழ்வு நிறுவனம் வெளியி்ட்டுள்ள கணக்கெடுப்பையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

எனினும், இந்நோய்க்கான சிகிச்சை பெற வசதிகள் கிடைக்காமலும், இந்நோய் தாக்கப்பட்டது குறித்து இன்னும் வெளியே சொல்லாமலும் பலர் இருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார் பேராயர் சிமோவோஸ்கி.

உலகில் அதிகமான தொழுநோயாளர்களைக் கொண்டுள்ள நாடு இந்தியாவாகும். அதற்கடுத்த நிலையில் இருப்பது பிரேசில் நாடாகும். இன்னும், அங்கோலா, பங்களாதேஷ், மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, காங்கோ ஜனநாயகக் குடியரசு, இந்தோனேசியா, மடகாஸ்கர், மொசாம்பிக், நேபாளம், டான்சானியா போன்ற நாடுகளிலும் தொழுநோயாளர்கள் உள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் இறுதி ஞாயிறன்று உலக தொழுநோயாளர் தினம் கடைபிடிக்கப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.