இலங்கை தேர்தல் வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலர், கண்காணிப்பாளர்கள்
கவலை
சன.21,2010 இலங்கை அரசுத்தலைவர் தேர்தலையொட்டி அங்கு நடைபெறும் வன்முறைகள் குறித்து தன்
கவலையை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலர் Ban Ki moon, இத்தேர்தலில் போட்டியிடும்
அனைத்து கட்சிகளையும் வன்முறைகளைக் கைவிடுமாறு அழைப்பு விடுத்துள்ளார் என ஊடகங்கள் கூறுகின்றன. இலங்கையில்
தேர்தல் வன்முறைகள் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருப்பதாகக் அந்நாட்டின் தேர்தல் கண்காணிப்பாளர்கள்
கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளனர். வருகின்ற 26ஆம் தேதி அமைதியான முறையில் வாக்களிப்பு
இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாகக் கூறுகின்றார்கள். கடந்த ஒரு
வார காலத்தில் மாத்திரம் 4 பேர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், 39 பேர் காயமடைந்திருப்பதாகவும் காவல்துறையினர் அறிவித்திருப்பதாகச்
செய்திக்குறிப்பொன்று கூறுகிறது. கடந்த 20 வருடங்களில் நடைபெற்ற தேர்தல்களின்போது
இடம்பெறாத அளவுக்கு முறைகேடுகளும், அத்துமீறல் சம்பவங்களும் இப்போது நடைபெற்றிருப்பதாகக்
கண்காணிப்பாளர்கள் கூறுகின்றார்கள். இந்த நிலைமையானது, நியாயமான முறையில் தேர்தல் நடைபெறவேண்டும்
என்பதற்காகச் செயற்பட்டு வருகின்ற பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பெரும் அதிருப்தியையும்
கவலையையும் தோற்றுவித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.