சன.13,2010 புதன் பொது மறைபோதகத்தில் கலந்து கொண்ட பயணிகளிடம், மத்தியகால கிறிஸ்தவ கலாச்சாரம்
பற்றிய இன்றைய நமது மறைபோதகத்தில், இரண்டு பெரிய இரந்துண்ணும் துறவு சபைகளால் ஊக்குவிக்கப்பட்ட
திருச்சபை மறுமலர்ச்சி இயக்கம் குறித்து நோக்குவோம் என்று ஆங்கில மொழியில் உரையைத் தொடங்கினார்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட். ஒவ்வொரு காலத்திலும்
புனிதர்கள் திருச்சபையின் வாழ்க்கையில் உண்மையான சீர்திருத்தவாதிகளாய் இருந்துள்ளார்கள்.
13ம் நூற்றாண்டில், புனிதர்கள் பிரான்சிசும் டொமினிக்கும், பிரமாண்டமான நற்செய்தி புதுப்பித்தல்
இடம் பெற தூண்டுதலாய் இருந்திருக்கிறார்கள். அது அக்காலத்திய திருச்சபையின் மூன்று குறிப்பிடத்தகும்
தேவைகளை நிறைவேற்றுவதாய் இருந்தது. பிரான்சிஸ் துறவு சபையினரும் டொமினிக்கன் என்ற சாமிநாதர்
துறவு சபையினரும் நற்செய்தி ஏழ்மையின் அடிப்படையிலான ஒரு வாழ்க்கை வாழ்ந்தார்கள். இது,
கத்தார்ஸ் போல் அல்லாமல், காணக்கூடிய திருச்சபையோடும், படைப்பின் நன்மைத்தனத்தை ஒரு ந்லல
கிறிஸ்தவப் புரிந்து கொள்ளுதலோடும் ஒன்றிப்புணர்வு கொள்வதன் அடிப்படையில் அமைந்திருந்தது.
இந்தத் துறவிகள் ஆர்வமிக்கப் போதகர்களாக, குறிப்பாக, கிராமப்புற சுற்றுச்சூழல்களில் ஆர்வம்
கொண்டவர்களாக, பொதுநிலை விசுவாசிகளுக்கு சமயக் கல்வியையும் ஆன்மீக வழிகாட்டுதலையும் வழங்கினர்.
இந்தப் பொதுநிலை விசுவாசிகளில் பலர் அந்தத் துறவு சபைகளின் மூன்றாம் சபைகளில் இணைந்தனர்.
இவர்கள், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் சுதந்திரமாகப் பயணம் செய்து, திருச்சபையின்
வாழ்க்கையில் ஒட்டுமொத்தப் புதுப்பித்தலுக்கும் சமுதாயத்தின் ஆன்மீக மாற்றத்திற்கும்
உதவியுள்ளார்கள். அந்தத் துறவிகள் பல்கலைக்கழகங்களில் பணியாற்றியதன் மூலம், விசுவாசம்
மற்றும் அறிவின் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி, கலாச்சாரத்தை நற்செய்தி படிப்பினைகளின்படி
பரப்புவதற்கும் அறிவுப்பூர்வமான இறையியலைச் இரத்தினச் சுருக்குமாகப் படைப்பதற்கும் உழைத்துள்ளனர்.
அந்தத் துறவிகளின் தூய்மை மற்றும் நற்செய்தி படிப்பினையின் வழியிலான வாழ்க்கை, நாம் நற்செய்திக்குச்
சான்று பகரவும் உலகை கிறிஸ்து மற்றும் அவரின் திருச்சபை பக்கம் ஈர்ப்பதற்கான நமது முயற்சிகளுக்கும்
எடுத்துக்காட்டாய் இருப்பதாக. இவ்வாறு இப்புதன் பொது மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை,
அனைவரையும் வாழ்த்தி தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.