சன.12,2010 இரண்டாம் உலகப் போரின்
போது ஹிட்லரின் நாத்சி வதை முகாம்களில் அடைக்கப்பட்ட மக்கள் வாய்விட்டுச் சொல்ல முடியாத
கொடுமைகளுக்கு ஆளானார்கள். இலட்சக்கணக்கில் இறந்தனர். அதில் தப்பிப் பிழைத்தவர்களும்
உண்டு. அந்தக் கொடுமைச் சிறையிலிருந்து வெளியே வந்த இரண்டு நண்பர்கள் வெகு காலத்திற்குப்
பிறகு சந்தித்துக் கொண்டார்கள். ஒருவரின் முகத்தில் மகிழ்ச்சி. மற்றொருவரின் முகத்தில்
தளர்ச்சி. விடுதலையானதற்கான அறிகுறியே இவரிடம் இல்லை. இவர், முதலாமவரிடம், நீ அவர்களை
மன்னித்து விட்டாயா என்று கேட்டதும் ஆமாம் என்றார் அவர். ஆனால் என்னால் அவர்களை மன்னிக்கவே
முடியவில்லை. இன்னமும் அந்தப் பகைமையுணர்வு எனக்குள் எரிந்து கொண்டே இருக்கின்றது என்றார்.
அப்போது முதலாமவர் அவரிடம், அப்படியானால் இன்னமும் நீ அவர்களின் சிறையிலேதான் வாழ்ந்து
கொண்டிருக்கிறாய் என்றார். இதனைக் கேட்டதும் அவர் சிந்திக்கத் தொடங்கினார். அவருக்குத்
தான் சிறைப்பட்டிருப்பதன் உண்மை புரிந்தது. ஆம். நம்மை வெறுக்கிறவர்கள் நமக்குப் பகைவர்கள்
அல்ல. மாறாக நாம் வெறுப்பவர்கள்தாம் நமக்குப் பகைவர்கள்.