வத்திக்கானுக்கு அருகிலுள்ள பகுதிகளில் இடம் பெறும் பாதுகாப்புப் பணிகள், பாப்பிறையின்
திருப்பணிகள் செய்யப்படுவதற்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றன- திருத்தந்தை
சன.08,2010 வத்திக்கான் புனித பேதுரு வளாகம் மற்றும் வத்திக்கானுக்கு அருகிலுள்ள பகுதிகளில்
இடம் பெறும் பாதுகாப்புப் பணிகள், பாப்பிறையின் திருப்பணிகள் செய்யப்படுவதற்கு மிகவும்
இன்றியமையாததாக இருக்கின்றன என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
வத்திக்கானின்
பொதுபாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள இத்தாலிய காவல்துறையினரை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில்
சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, திருத்தந்தைக்கும் திருச்சபைக்கும் இவர்கள் ஆற்றி
வரும் சேவைகளுக்குத் தமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
இவர்களின் பணி
கத்தோலிக்க விசுவாசத்தின் மையத்திற்கு வரும் திருப்பயணிகள் மற்றும் பயணிகளின் அமைதிக்கும்
பாதுகாப்பிற்கும் மிகவும் தேவையானதாகவும் புனித பேதுருவின் கல்லறையையும் பசிலிக்காவையும்
தரிசிப்பவர்களுக்குத் தேவையான ஆன்மீக ஆதரவை அளிப்பதாகவும் இருக்கின்றது என்றும் அவர்
தெரிவித்தார்.
இது, இவர்களின் கடமையை நிறைவேற்றுவதாக இருந்தாலும் விசுவாசக் கண்களோடு
நோக்கும் போது இது சிறப்பான வழிகளில் ஆண்டவருக்குச் சேவை செய்து அவரது வழியைத் தயாரிப்பதாக
இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
ஏனெனில் கிறிஸ்தவத்தின் மையத்தில்
கிடைக்கும் அனுபவம் ஒவ்வொரு திருப்பயணிக்கும், வாழ்வை மாற்றுகின்ற நம் ஆண்டவரைச் சந்திப்பதாக
இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.