சன.07,2010 அன்புள்ளங்களே, இந்த 2010ம் ஆண்டின் இந்நாளைய இலங்கைச் செய்திகள் பக்கம் செல்லும்
போது, அந்நாட்டில் இம்மாதம் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல், அதையொட்டிய வேட்பாளர்களின்
தேர்தல் வாக்குறுதிகள் போன்றவைகளையே அதிகம் வாசிக்க முடிகிறது. யாழ் உயர் பாதுகாப்பு
வலயங்களில் மக்கள் குடியேற்றப்படுவார்கள் என்று, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகரான
பசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். அத்துடன், விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள்
என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு, தற்போது நன்னடத்தை முகாமில் வைக்கப்பட்டுள்ள இளைஞர்களில்
1000 பேர், விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள், யாழ்ப்பாணத்தை இலங்கையின் தென்பகுதியுடன்
இணைக்கும் ஏ-9 பாதை இனிமேல் 24 மணிநேரமும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்திருக்கும்
என்றும் அவர் அறிவித்துள்ளார். இதற்கிடையே வடக்கே வவுனியாவில், காணாமல் போனோரின் பெற்றோர்
தமது பிள்ளைகளைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடெங்கும்
தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த சுமார் மூவாயிரத்து ஐநூறு பேர் வரையில்
காணாமல் போயுள்ளனர் என்றும் ஓர் அமைப்பு கூறியுள்ளது. இந்நிலையில் இவ்வாண்டில் இலங்கைத்
தமிழரின் எதிர்பார்ப்புகள் என்னவென்று யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் அவர்களைத்
தொலை பேசி வழியாகக் கேட்டோம்.