புனிதபூமிக் கிறிஸ்தவர்களுடன் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதற்கு ஐரோப்பா
மற்றும் வட அமெரிக்க கத்தோலிக்க ஆயர்கள் பயணம்
சன.06,2009 புனித பூமியில் துன்புறும் கிறிஸ்தவ சமூகத்துடனான தங்களின் ஒருமைப்பாட்டுணர்வை
தெரிவிக்கும் நோக்கத்தில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க கத்தோலிக்க ஆயர்கள் புனித பூமிக்குப்
பயணத்தைத் தொடங்கியுள்ளனர். திருப்பீடத்தின் கோரிக்கையின் பேரில், 1998ம் ஆண்டு முதல்,
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவையால் இத்தகைய பயணம் ஒன்று வருடந்தோறும் இடம் பெற்று
வருகிறது. பிரிட்டனின் லிவர்பூல் பேராயர் பாட்ரிக் கெல்லி தலைமையில் தொடங்கியுள்ள
இவ்வாண்டின் இப்பயணத்தின் முதல் கட்டமாக வருகிற ஞாயிறன்று ஆயர்கள் West Bank பகுதியில்
சுற்றுப் பயணங்களை மேற்கொள்வர். எருசலேமைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களின் இடப்பெயர்வு,
சொத்துக்கள் பறிமுதல் போன்றவற்றால் துன்புறும் கிறிஸ்தவர்களைச் சந்தித்தல், இஸ்ரேல் மற்றும்
பாலஸ்தீனத் தலைவர்களைச் சந்தித்தல் போன்றவையும் ஆயர்களின் பயணத் திட்டங்களில் குறிக்கப்பட்டுள்ளன.