கிறிஸ்துமஸ்
நாடகங்களைப் பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறேன். சிறுவயதில் அந்த நாடகங்களில் எனக்குப் பிடித்த பாத்திரங்கள் யார்
தெரியுமா? மூன்று ராஜாக்கள். அந்த மூன்று ராஜாக்களில் ஒருவராக நடிப்பதற்கு ஆசை. காரணம்?
அந்த மூன்று பேரும் பளபளப்பாய் உடை அணிந்து வருவர். தலையில் தங்கக் காகிதத்தில் செய்த
மகுடம் வைத்திருப்பர். இப்படி அலங்காரமாக வந்து போக வேண்டும். அவ்வளவுதான். வசனங்கள் மனப்பாடம்
செய்யத் தேவையில்லை.
சின்ன வயதில் இவ்வளவு எளிதாக, பகட்டாகத் தெரிந்த இந்த அரசர்கள்
இன்று என்னைப் பிரமிக்க வைக்கிறார்கள், ஒருவகையில் என்னை பயமுறுத்துகிறார்கள். ஏன் இந்த
பிரமிப்பு? பயம்? சொல்கிறேன்.
மூன்று ராஜாக்கள், மூன்று அரசர்கள் அல்லது மூன்று
ஞானிகள் என்று பலவாறாக அழைக்கப்படும் இந்த மூவரும் யார்? வரலாற்று பூர்வமான, துல்லியமான
பதில்கள் இந்தக் கேள்விக்கு எளிதில் கிடைக்காது. மத்தேயு நற்செய்தியில் மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கும்
இந்த மூவரும் கடந்த 20 நூற்றாண்டுகளாக பல கோடி மக்களின் மனங்களில் இறைவனைத் தேடும் தாகத்தை உண்டாக்கியிருக்கிறார்கள்.
இந்த ஒரு காரணம் போதும் இவர்களுக்கு விழா எடுப்பதற்கு.
மத்தேயு நற்செய்தி
2 1-12
இன்று நாம் கொண்டாடும் மூன்று அரசர் அல்லது மூன்று ஞானிகள்
திருநாள், இறைவன் தன்னை உலகமனைத்திற்கும் வெளிப்படுத்திய திருக்காட்சி திருநாள் எனக்
கொண்டாடப்படுகிறது. இறைவன் தங்களுக்கு மட்டுமே தோன்றுவார் என்று எண்ணி வந்த யூத குலத்தவருக்கு
இந்தத் திருநாள், இதில் பொதிந்திருக்கும் உண்மை அதிர்ச்சியைத் தந்திருக்கும். வான தூதர்
வழியாக, எரியும் புதர் வழியாக தங்களுக்கு மட்டுமே தோன்றிய இறைவன் இன்று மற்றவருக்கும்
தோன்றினார் என்பது அவர்களுக்கு அதிர்ச்சி. எந்த ஒரு மனிதக் குழுவாலும் ஒளித்து வைக்க
முடியாதவர் இறைவன். இறைவன் இந்த உலகத்தின் பொது சொத்து. யாருக்கும் தனிப்பட்ட வகையில்
சொத்தாக முடியாது. உண்மையில் பார்க்கப்போனால் இந்த உலகமே அவரது சொத்து. இப்படியிருக்க,
இந்த இறைவனைப் பங்கு போட்டு பிரித்து அதனால், மக்களையும் பிரிக்கும் பல எண்ணங்கள் தவறானவை
என்பதைச் சுட்டிக்காட்டும் விழா இது. இறைவனையும், மக்களையும் பிரிக்கும் பல எண்ணங்கள்
இந்த புத்தாண்டில் களையப்பட வேண்டுமென முதலில் வேண்டிக்கொள்வோம்.
தன்னைத்
தேடும் அனைவருக்கும் தன்னை வெளிப்படுத்தும் அழகு அவரது. இன்னும் இதில் அழகு என்னவெனில்,
அவரைத் தேடி ஏழு கடல்கள், மலைகள் தாண்டி செல்லத் தேவையில்லை. அவர் எப்போதும் எங்கும்
நம்மைச் சூழ்ந்தே இருக்கிறார். அவரைக் காண நாம் மறுத்து, கண்களை, அகக் கண்களை மூடிக்
கொள்வதாலேயே, அவர் தூரமாய் இருப்பதைப் போல் உணர்கிறோம்.
இறைவனைத் தேடுவதைப் பற்றி
Blaise Pascal என்பவர் சொல்லிய கருத்துக்கள் இங்கே நினைவுக்கூரப்பட வேண்டியவை. அதற்கு
முன், யார் இந்த Blaise Pascal? உங்களில் பலருக்கு அவரைத் தெரிந்திருக்கும். நாம் இப்போது
பயன்படுத்தும் கணணி (Computer) யின் முன்னோடியான ஒரு கணக்கு இயந்திரத்தைக் கண்டு பிடித்தவர்
இவர். இவர் சொன்னது: "மூன்று வகை மனிதர்கள் உள்ளனர். முதல் வகையினர் இறைவனைத் தேடி, கண்டுபிடித்து
அவருக்குப் பணிவிடை செய்பவர்கள். இவர்கள் அறிவாளிகள், மகிழ்வுடன் வாழ்பவர்கள். இரண்டாம்
வகையினர் இறைவனைக் காணாது தேடிக் கொண்டிருப்பவர்கள். இவர்களும் அறிவாளிகள், ஆனால், மகிழ்வின்றி
வாழ்பவர்கள். மூன்றாம் வகையினர் இறைவனைத் தேடாமல், காணாமல் இருப்பவர்கள். இவர்கள் மதி
இழந்தவர்கள், மகிழ்வையும் இழந்தவர்கள்."
மரியா, யோசேப்பு ஆகியோர் முதல்
குழுவைச் சேர்ந்தவர்கள். இடையர்களையும் இந்தக் குழுவில் சேர்க்கலாம். இறைவனைத் தேடாமல்,
காணாமல் தன் உலகமே பெரிதென்று, அந்த உலகத்தில் தன்னையே கடவுள் நிலைக்கு உயர்த்திக்கொண்டு
வாழ்ந்த ஏரோது, அவனுக்கு துதிபாடிக் கொண்டிருந்த குருக்கள், மறைநூல் வல்லுநர் ஆகியவர்கள்
மூன்றாம் வகையினர். மதியையும், மகிழ்வையும் வாழ்வில் தொலைத்தவர்கள். இந்த எரோதைப் பற்றி
இன்னும் கொஞ்சம் சிந்திப்பது நமக்கு நல்லது.
இன்றைய நற்செய்தியில் ஏரோது இயேசுவைத்
தேடுவது போல் தெரியலாம். அவன் இயேசுவைத் தேடியதற்கு ஒரே காரணம்... அக்குழந்தையைக் கொல்வதற்கு.
தன் அரியணைக்கு, அதிகாரத்திற்கு ஆபத்து வரக்கூடும் என்று நினைத்ததால், தன் மனைவியையும்,
இரு மகன்களையும் கொன்றவன் இந்த ஏரோது. இயேசுவை விட்டுவைப்பானா?
Blaise Pascal
கூறிய இரண்டாவது வகையினரைத்தான் இன்று நாம் கொண்டாடுகிறோம். இந்த மூன்று ஞானிகள் இயேசுவைச்
சந்திக்க வந்த இந்த நிகழ்வைப் பல கோணங்களில் சிந்திக்கலாம்.
விண்மீன்களின்
ஒளியில் நடந்தனர் இந்த ஞானிகள். நம் வாழ்க்கையை வழிநடத்தும் விண்மீன்கள் எவை என்று
சிந்திக்கலாம். இறைவனைச் சந்தித்தபின் இந்த ஞானிகள் வேறு வழியாகச் சென்றனர் என்று நற்செய்தி
சொல்கிறது. இறைவனைச் சந்திக்கும் போது, சந்தித்த பின் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி சிந்திக்கலாம்.
விண்மீன்கள் என்றதும் மனதில் நட்சத்திரங்கள், ஸ்டார்கள் என்ற சொற்களும் பல எண்ணங்களை
ஏற்படுத்துகின்றன. LKG யில் சொல்லித்தரப்பட்ட, இன்றும் சொல்லித் தரப்படும் Twinkle, twinkle
little star என்ற குழந்தைப் பள்ளி பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. இந்த வரிகளில்
ஆரம்பித்து, பின் வாழ்க்கையில் ஸ்டார்களைப் பற்றி நான் பயின்ற பாடங்கள் பலவும் நினைவுக்கு
வருகின்றன. தமிழ் நாட்டில், பல ஸ்டார்களை நாம் உருவாக்கி விட்டதால், ஸ்டார்களுக்குப்
பஞ்சம் இல்லாமல் போய்விட்டது. ஆனால், இந்த ஸ்டார்களைச் சுற்றி வட்டமிடும் விட்டில் பூச்சிகளை
நினைத்து வேதனையாய் இருக்கிறது.
விண்மீன்களைக் கண்டு பயணம் மேற்கொண்ட இந்த ஞானிகளைப்
பற்றி இன்றைய நற்செய்தி சொல்லும் மற்ருமொரு விவரம்: "கிழக்கிலிருந்து வந்த ஞானிகள்."
ஒரு சில விவிலிய ஆராய்ச்சியாளர்கள் இந்த ஞானிகள் இந்தியாவிலிருந்து, ஆசியாவிலிருந்து
வந்தவர்கள் என்று சொல்வர். இவர்கள் கோள்களை, நட்சத்திரங்களை ஆராய்ந்து வந்தவர்கள்.
நம்
தாயகத்தில் கோள்களை, நட்சத்திரங்களை வைத்து வாழ்வில் பல முடிவுகள் எடுக்கப்படுவதை நினைத்துப்
பார்க்கலாம். ஒருவர் பிறந்த தேதியால், பிறந்த நேரத்தால் அவருக்குக் குறிக்கப்படும் நட்சத்திரம்
அவரது வாழ்க்கையில் பல நேரங்களில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதை நாம் அறிவோம்.
இப்படி கோள்களையும், நட்சத்திரங்களையும் நம் வாழ்க்கையை நடத்திச் செல்ல விட்டுவிட்டு,
பல நேரங்களில் நம்மையும், நம் குடும்பங்களையும் வழிநடத்தும் பொறுப்பிலிருந்து நாம் விலகிப்
போகிறோமா என்பதைச் சிந்திக்கலாம்.
இந்த ஞானிகள் விண்மீன் தோன்றியதைக் கண்டனர்.
பயணத்தை மேற்கொண்டனர். விண்மீன் இரவில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். பகலில் தெரியாது.
எனவே இந்த ஞானிகள் இரவில் தங்கள் பயணத்தை அதிகம் செய்திருக்க வேண்டும். இரவில் மேற்கொள்ளும்
பயணங்கள் எளிதல்ல. அதுவும் தூரத்தில் தெரியும் ஒரு சிறு விண்மீனைப் பல்லாயிரம் விண்மீன்களுக்கு
நடுவே மீண்டும் மீண்டும் அடையாளம் கண்டு அந்த விண்மீனைத் தொடர்வது அவ்வளவு எளிதல்ல. பல
இரவுகள் மேகங்களும், பனிமூட்டமும் அந்த விண்மீனை மறைத்திருக்கும். அந்த நேரங்களில் மேகமும்,
பனியும் விலகும் வரைக் காத்திருந்து மீண்டும் விண்மீனைப் பார்த்து எத்தனை எத்தனை இரவுகள்
அவர்கள் நடந்திருக்க வேண்டும்? இத்தனை இடர்பாடுகள் மத்தியிலும் ஒரே குறிக்கோளுடன் இரவின்
துணையில் பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்த அந்த ஞானிகளின் மன உறுதி நமக்கெல்லாம் நல்லதொரு
பாடம்.
நாம் வாழும் அவசர உலகில், விண்மீன்களைப் பார்ப்பது அரிது. மிகவும் அரிது.
நம்மில் பலர் வாழ்வது நகரங்களில். அங்கு இரவும் பகலும் எரியும் செயற்கை விளக்குகளின்
ஒளியில் நாம் வானத்தையே மறந்து வாழ்கிறோம். வானத்தை நிமிர்ந்து பார்க்கக் கூட நமக்கு
இப்போது நேரமில்லை. எப்போது வானத்தைப் பார்ப்போம்? மேகங்கள் திரண்டு வரும் போது, "ஒருவேளை
மழை வருமோ?" என்ற சந்தேகப் பார்வையோடு வானத்தைப் பார்ப்போம்.
கருமேகம் சூழும்
போது சந்தேகத்தோடு நிமிர்ந்து வானத்தைப் பார்க்கிறோம். அதேபோல், உள்ளத்தில் கரு மேகங்கள்
சூழும் போதும் மீண்டும் வானத்தைச் சந்தேகத்தோடு பார்க்கிறோம்... கடவுள் என்ற ஒருவர் அங்கிருக்கிறாரா
என்பதைத் தெரிந்து கொள்ள. சந்தேகம் என்பது கறுப்புக் கண்ணாடி போன்றது. கறுப்புக் கண்ணாடியை
அணிந்து கொண்டால், பார்ப்பது எல்லாமே கருமையாகத்தானே தெரியும்.
சந்தேகம் வரும்போது
மட்டும் வானத்தைப் பார்த்தால், அங்கே கருமேகங்கள் மட்டுமே தெரியும். அந்தக் கருமேகங்களுக்குப்
பின் கண் சிமிட்டும் விண்மீன்கள் தெரியாது. அந்த விண்மீன்கள் கொடுக்கும் அழைப்பும் தெரியாது.
நம்
வாழ்க்கையில் உண்மை விண்மீன்கள் தொலைந்து போகும் போது, அந்த வெற்றிடத்தை நிரப்ப, மற்ற
போலியான, செயற்கையான ஸ்டார்கள் மனதை ஆக்கிரமித்து விடுகின்றன. இன்று நாம் சிந்திக்கும்
இந்த ஞானிகள் எத்தனை இரவுகள் விண்மீனைத் தொலைத்துவிட்டு வேதனை பட்டிருப்பார்கள்? இருந்தாலும்
இறுதிவரை மனம் தளராமல் பயணத்தைத் தொடர்ந்தார்கள், இலக்கை அடைந்தார்கள். கடவுளைக் கண்டார்கள்.
வெகு
தூரத்திலிருக்கும் விண்மீன்களை நோக்கிப் பயணங்களை ஆரம்பித்தால், அடுத்திருக்கும் அம்புலியிலாவது
காலடி வைக்க முடியும். கிளம்பும்போதே, அடுத்த ஊர் போதுமடா சாமி என்று குறுகிய குறிக்கோளுடன்
ஆரம்பித்தால், அடுத்த ஊரென்ன, அடுத்த வீட்டைக் கூட அடைய மாட்டோம். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
என்ற சொற்கள் நினைவிருக்கும் இல்லையா? உண்மையான விண்மீன்களைப் பார்த்ததால், அந்த விண்மீன்
காட்டிய பாதையில் சென்றதால் தங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய ஞானிகளைப் போல் எத்தனையோ
நல்ல உள்ளங்கள் தங்களையும், உலகத்தையும் மாற்றியிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி தொடர்ந்து
சிந்திப்போம்.