டிச.23,2009 கேட்கும் திறனையும், பேசும் திறனையும் இழந்த ஒரு கத்தோலிக்கர் இத்தகைய குறையுள்ளோருக்கு விவிலியச்
செய்திகளை வழங்கி வருகிறார். 56 வயதான அந்தோனி முத்துக்குன்னல் (Antony Muthukunnel)
தன் குறைபாடுகளால் பல ஆண்டுகள் மதம் சார்ந்த எல்லா நிகழ்வுகளிலிருந்தும் விலகி வாழ்ந்ததாகவும்,
25 ஆண்டுகளுக்கு முன்னர் தன் மனைவியின் வற்புறுத்தலால் கலந்து கொண்ட ஒரு தியானம் தன்
வாழ்வை மாற்றிவிட்டதாகவும் தெரிவித்தார். தன்னுடைய மன மாற்றத்தையும், இறை அனுபவத்தையும் தன்னைப்
போல் குறையுள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள அவர் முடிவு செய்து, அதன் விளைவாக கடந்த மூன்று ஆண்டுகளாய்
ஒவ்வொரு ஞாயிறும் விவிலிய வகுப்புகளை முத்துக்குன்னல் நடத்தி வருகிறார். தெல்லிச்சேரி
உயர்மரைமாவட்டத்தைச் சேர்ந்த ஆலக்கோடு தூய மரியா ஆலயத்தில் நடைபெறும் இவ்வகுப்புகளில் கலந்து
கொள்ள 100 கி.மீ. தூரத்திலிருந்தும் பலர் வருகின்றனர் என்று அருட்தந்தை ஜார்ஜ் குடிலில்
கூறினார். கேட்கும் திறனும், பேச்சுத் திறனும் இல்லாமல் இருப்பதை இறைவனின் சாபம் என்று
எண்ணி வந்த தனக்கு இந்த வகுப்புகள் நல் வழிகாட்டி, மீண்டும் தன்னை இறைவனிடம் அழைத்துவந்துள்ளதென மேரி ஜோசப்
என்ற மாணவி கூறினார்.