2009-12-16 16:27:41

கோபன்ஹாகனில் நிலவும் இறுக்கமானச் சூழ்நிலையை எளிதாக்க பிரித்தானியப் பிரதமர் முயற்சி


டிச.16,2009 கோபன்ஹாகனில் நடைபெறும் தட்பவெப்ப   நிலை மாற்றம் குறித்த உலக மாநாட்டில் கலந்துகொண்ட ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய பல்வேறு நாடுகளின் அங்கத்தினர்கள் வெளிநடப்பு செய்ததால் பேச்சுவார்த்தைகள் இச்செவ்வாயன்று தடைபெற்றதை அடுத்து, அந்த இறுக்கமானச் சூழ்நிலையை எளிதாக்க பிரித்தானியப் பிரதமர் Gordon Brown இப்புதனன்று கோபன்ஹாகன் சென்றடைந்தார். உலகின் பல அரசுத் தலைவர்கள் வரும் வெள்ளியன்று இம்மாநாட்டில் கலந்து கொண்டு இறுதி முடிவுகளை எடுக்கவுள்ளச் சூழ்நிலையில், அங்கு நடைபெறும் பேச்சுவார்த்தைகள் சுமுகமாகச் செல்வதற்கு வழிசெய்யும் வகையில் பிரித்தானியப் பிரதமர் ஒரு நாள் முன்னதாக அங்கு சென்றுள்ளது பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. Kyoto  தீர்மானங்களைப் புறக்கணிக்கும் வகையில் இம்மாநாட்டில் நடைபெறும் விவாதங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் வெளிநடப்பு செய்துள்ளன. Kyoto தீர்மானங்களை மதித்து, அவைகளை மீண்டும் வலியுறுத்தும் வண்ணம் விவாதங்களும், தீர்மானங்களும் எடுக்கப்படுவதையே தாங்கள் வலியுறுத்தப்போவதாக இந்நாட்டின் பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.







All the contents on this site are copyrighted ©.