கோபன்ஹாகனில் நடைபெறும் உலகமாநாட்டையொட்டிசிங்கப்பூரில்திருவிழிப்புசெபவழிபாட்டை நடத்தினர் அருட்சகோதரிகள்
டிச.16,2009 கடவுள் நம்மை உலகத்தின் கண்காணிப்பாளர்களாக நியமித்துள்ளார்; நாம் இந்த உலகத்தை
பாதுகாக்கும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்று பிரன்சிஸ்கன் மறைபரப்புப்பணி சபையைச்
சார்ந்த அருட்சகோதரி மேரி சோ (Mary Soh ) கூறினார். இவ்வாரம் கோபன்ஹாகனில் நடைபெறும்
தட்பவெப்ப நிலைமாற்றம் குறித்த உலக மாநாட்டையொட்டி சிங்கப்பூரில் திருவிழிப்பு செபவழிபாட்டை
மேற்கொண்ட பிரன்சிஸ்கன் அருட்சகோதரிகள் தங்கள் சபையின் பாதுகாவலர் புனித பிரான்சிஸ்
இயற்கையின் மேல் கொண்ட ஈடுபாடு தங்களை இந்த முயற்சியை மேற்கொள்ளத் தூண்டியது என்றனர். திருச்சபையிலும்,
கோவில்களிலும் குளிர்சாதன வசதிகளைக் குறைத்தல், கோவிலுக்குத் தனிப்பட்ட வாகனங்களில் செல்வதைக்
குறைத்தல், மறுசுழற்சி முறையில் பொருட்களைப் பயன்படுத்துதல் போன்ற முயற்சிகளை மேற்கொண்டால்
இயற்கையைப் பாதுகாக்கும் பொறுப்பில் நாமும் பங்கேற்போம் என்று அருட்சகோதரி Soh கூறினார்.
திருச்சபை இயற்கையைக் குறித்த நல்ல விழிப்புணர்வு பெற்றிருப்பது மனதுக்கு நிறைவளிக்கிறதென
இந்த திருவிழிப்பு செபவழிபாட்டில் பங்கு பெற்ற இளையோர் பலர் கூறினர்.