டிச.11,2009 இவ்வியாழனன்று நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அமெரிக்க அரசுத் தலைவர் ஒபாமா அமைதிக்கான
நோபெல் பரிசைப் பெற்று கொண்டுள்ளார். பரிசை ஏற்று உரையாற்றிய ஒபாமா, இந்தப் பரிசைப் பெறுவது
தனக்குள் நன்றியுணர்வையும், தன்னடக்கத்தையும் பெருகச் செய்துள்ளது என்று கூறினார். இவ்விருதினைப்
பெற்றுள்ள நெல்சன் மண்டேலா, அன்னை தெரசா, மார்டின் லூத்தர் கிங் இவர்களுடன் தன்னை ஒப்புமைப்படுத்திப்
பார்க்கையில், தான் இதைப் பெறுவதற்கு மிகக் குறைந்த தகுதியே உடையவர் என்று தன் ஏற்புரையில்
கூறினார். அமெரிக்கா தற்சமயம் தொடுத்துவரும் இரண்டு யுத்தங்கள் பற்றிப் பேசுகையில், ஆயுத
மோதல்களால் விளையும் பாதிப்புகளை தான் அதிகம் உணர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில்
நடந்துவரும் யுத்தத்தில் கூடுதலாக முப்பதாயிரம் அமெரிக்கப் படையினரை ஈடுபடுத்தப்போவதாக
சமீபத்தில்தான் ஒபாமா அறிவித்திருந்தார்.உலக நாடுகள் மத்தியில் அரசியல் உறவுகளை வலுப்படுத்த
அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டார் என்று கூறி அம்முயற்சிகளுக்காக
அவருக்கு நோபல் பரிசை வழங்குவதாக தேர்வுக்குழு கூறியிருந்தது.