2009-12-10 15:38:26

உலக மனித உரிமைகள் - ஐ.நா.பொதுச் செயலரின் செய்தி


டிச.10,2009 ஊனமுற்றோர், பெண்கள், சிறுமிகள், ஏழைகள், குடியேற்றதாரர், சிறுபான்மையினர் என பல்வேறு நிலையிலுள்ள நலிந்தவர்கள் பாகுபடுத்தப்படுவது தொடர்ந்து இடம் பெறுவதாக ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.

உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்ட மூன், உலகில் இடம் பெறும் பாகுபாடுகளை ஒழிப்பதற்கு ஐ.நா.வும் மனித உரிமை ஆர்வலர்களும் எடுத்து வரும் முயற்சிகளுக்கு அனைவரும் ஆதரவு வழங்குமாறு கேட்டுள்ளார்.

1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி உலகளாவிய மனித உரிமைகள் சாசனம் கொண்டு வரப்பட்டதையடுத்து, ஆண்டுதோறும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவ்வியாழனன்று 61வது உலக மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்பட்டது.

மேலும், இந்நாளையொட்டி செய்தி வெளியிட்ட ஐ.நா.மனித உரிமைகள் அவையின் உயர் இயக்குனர் நவநீதம்பிள்ளை, சர்வதேச சட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான தேசிய மற்றும் மாநில சட்டங்கள் ஆதரவு வழங்கினாலும் இன்னும் பாகுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன என்று கூறியுள்ளார்.

உலகில் 37 கோடி பழங்குடியினர் உலக மக்கட் தொகையில் 5 விழுக்காடேயானாலும் உலகின் ஏழைகளில் 15 விழுக்காட்டினர் அம்மக்களே என்று அவர் கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.