2009-12-09 17:03:13

ஜப்பானிய சட்டம் ஒன்பதாம் பிரிவை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் - பல்வேறு மதங்களின் ஆசியத் தலைவர்கள்


டிச.09,2009 ஜப்பான் அரசு போர் படையை உருவாக்குவதைத் தடுப்பதற்கும், பிற நாடுகளுடன் போர் புரிவதைத் தடுப்பதற்கும் அந்நாடு உருவாக்கிய ஜப்பானிய சட்டம் ஒன்பதாம் பிரிவை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என பல்வேறு மதங்களின் ஆசியத் தலைவர்கள் அண்மையில் கொரியாவின் Seoul நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில் தீர்மானம்செய்தனர். டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கத்தோலிக்க, புத்த மதத் தலைவர்கள் உட்பட, ஆசியாவின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த 80க்கும் மேற்பட்ட மதத் தலைவர்கள் இத்தீர்மானத்தை முழுமனதாக நிறைவேற்றினர். ஜப்பானின் அமைதி மற்றும் நீதிக்கான கத்தோலிக்கக் குழுவின் தலைவரும், ஒசாகா மறைமாவட்டத்தின் துணை ஆயருமான Michael Matsuura இக்கூட்டத்தில் அனைவரும் அர்த்தமுள்ள வகையில் கலந்து கொண்டு நம்பிக்கை தரும் இத்தீர்மானத்தை எடுத்தது மன நிறைவை அளிக்கிறதென்றும், இத்தலைவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பிச் சென்று அங்குள்ள அமைதி குறித்த விஷயங்களில் ஈடுபவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். ஜப்பானில் உள்ள பழமைவாதிகள் அந்நாட்டுச் சட்டத்தின் ஒன்பதாம் பிரிவை மாற்றுவதற்கு பல வழிகளில் முயற்சித்து வரும் போது, இது போன்ற ஒரு முடிவை ஆசிய மதத் தலைவர்கள் எடுத்திருப்பது நம்பிக்கை தருவதாக உள்ளதென ஆயர் Matsuura கூறினார்.







All the contents on this site are copyrighted ©.